Paristamil Navigation Paristamil advert login

காசா விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்: சோனியா குற்றச்சாட்டு

காசா விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்: சோனியா குற்றச்சாட்டு

28 ஆனி 2026 ஞாயிறு 07:36 | பார்வைகள் : 344


காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை குறித்து மத்திய பாஜ அரசு மவுனமாகவும், செயலற்றதாகவும் உள்ளது. இந்த மோதலுக்கு இந்தியா அளித்த பதில் அதன் தார்மீகத்திற்கும், தேசிய நலனுக்கும் எதிரானது என  காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:

காசாவில் குழந்தைகளை குறிவைப்பது தற்செயலானது அல்ல. அது ஒரு  திட்டமிட்ட உத்தி. பள்ளிகள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகள் அழிப்பு மனிதாபிமான நெருக்கடிகளை  மேலும் மோசமாக்கி உள்ளது.

2023 அக்.,  7 ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது. முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றாலும் அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்தின் பதில் நடவடிக்கை அத்துமீறிய கொடுமை மற்றும் காட்டுமிராண்டித்தனம் நிறைந்தது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரத மூத்த அமைச்சர்கள் காசாவை முழுமையாக முற்றுகையிடவும்,  முற்றிலும் அழிக்கவும் அழைப்பு விடுத்தனர். இத்தகைய அறிக்கைகள் இனப்படுகொலை நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவின் ஆதரவு காரணமாக, காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.  அங்கு நடந்த மனித உரிமை மீறல்களை சர்வதேச அமைப்புகள் ஆவணப்படுத்தி உள்ளன. காசாவில் நிலைமை குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்த போதிலும் இந்தியா தனி மவுன குரலாகவே நீடிக்கிறது.

வரலாற்று ரீதியாக, காலனித்துவத்திற்கு பிறகு இந்தியா, ஒற்றுமை,  தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச அமைதி ஆகியவற்றுக்காக நின்றது. ஆனால், பாலஸ்தீனியர்களின் துன்பங்கள் மீதான நிகழ்வுகளில் மத்திய அரசின் மவுனமும், செயலற்ற தன்மையும் தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்கது. தேசிய நலன் கண்ணோட்டத்தில் விளக்க முடியாதது.

பாலஸ்தீனம், ஈரான் மற்றும்  மத்திய கிழக்கு பகுதிகளில்  உள்ள நமது நட்பு நாடுகளிடம் இருந்து நம்மை அந்நியப்படுத்திக் கொண்டோம். அப்பிராந்தியத்தில் வரலாற்று தொடர்புகள் காரணமாக இந்தியா பெற்றிருந்த ராஜதந்திர  தொடர்புகளை  பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நாம் அனுமதித்து விட்டோம்.

அனைத்து நாடுகளையும் விட்டுவிட்டு கொடூரமான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தரின் இடத்தைப் பிடிக்க நாம் அனுமதித்து விட்டோம். நமது நலன்களையும் தார்மீக நெறிகளையும்  நாம் தியாகம் செய்ததன் விளைவாக பிரதமர் மோடிக்கும், பிரதமர் நெதன்யாகுவுக்கும்  இடையிலான நட்பு மட்டுமே நமக்கு கிடைத்து உள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் சோனியா கூறியுள்ளார்.