சினிமாவை மிஞ்சிய பாக்யராஜ் - பூர்ணிமா காதல் கதை
27 ஆனி 2026 சனி 11:50 | பார்வைகள் : 434
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநர், நடிகர் என்ற அடையாளத்தைப் பெற்ற கே. பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா ஜெயராமின் காதல் வாழ்க்கை பல சுவாரஸ்யமான சம்பவங்களை உள்ளடக்கியது. பூர்ணிமா முதன்முதலாக பாக்யராஜை சந்தித்தபோது, பட வாய்ப்பு கேட்டு சென்றிருந்தார். உற்சாகமாக ஆங்கிலத்தில் பேசிய அவரிடம், "ஓகே... சீ யூ" என்று மட்டும் கூறிவிட்டு பாக்யராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால், "பாக்யராஜ் மிகவும் திமிரான மனிதர்" என்ற எண்ணமே பூர்ணிமாவுக்கு ஏற்பட்டது. அதன்பிறகு அந்த சந்திப்பை பெரிதாக நினைக்காமல் தனது பணிகளில் கவனம் செலுத்தினார்.
சில மாதங்களுக்கு பிறகு, தனது டார்லிங் டார்லிங் டார்லிங் படத்திற்காக புதிய கதாநாயகியை தேடிய பாக்யராஜுக்கு, பூர்ணிமாவின் முகம் நினைவுக்கு வந்தது. அவரை அழைத்து கதையை விவரித்தபோது, முதல் சந்திப்பில் நடந்த சம்பவம் குறித்து பூர்ணிமா கேள்வி எழுப்பினார். அதற்கு, "நீங்கள் பேசிய ஆங்கிலம் எனக்கு சரியாக புரியவில்லை. அதனால்தான் அந்த சூழ்நிலையை சமாளிக்க அப்படிச் சொன்னேன்" என்று பாக்யராஜ் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த பதில் இருவருக்கும் இடையே இருந்த மனக்கசப்பை உடைத்தது.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும், இயக்குநர்-நடிகை என்ற தொழில்முறை உறவுதான் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பாக்யராஜின் மனைவி பிரவீனா உயிருடன் இருந்ததால், இருவருக்கும் காதல் என்ற எண்ணமே உருவாகவில்லை. படப்பிடிப்பு நாட்களில் பூர்ணிமா அடிக்கடி பாக்யராஜின் வீட்டிற்கு செல்வார். அப்போது பிரவீனாவுடன் அவருக்கு நெருக்கமான நட்பு உருவானது. மேலும், பாக்யராஜ்-பிரவீனாவின் திருமண நாள் மற்றும் பூர்ணிமாவின் பிறந்த நாள் ஒரே தேதியில் அமைந்திருந்தது அவர்களை ஆச்சரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரவீனா உடல்நலக் குறைவால் காலமானது பாக்யராஜின் வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. அந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் சில காலம் தனிமையில் இருந்த அவர், குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்குப் பிறகே மறுமணம் குறித்து சிந்திக்கத் தொடங்கினார்.
அந்த சமயத்தில் மும்பையில் நடந்த சந்திப்பில் பூர்ணிமாவை மீண்டும் பார்த்த பாக்யராஜ், தனது வாழ்க்கைத் துணையாக அவரே பொருத்தமானவர் என்ற எண்ணத்தில் அவரிடம் காதலை தெரிவிக்க முடிவு செய்தார். ஆனால், அடுத்த நாளே படப்பிடிப்பிற்காக பாரீஸ் செல்ல வேண்டியிருந்ததால், அங்கிருந்து தொடர்பு கொள்ளுமாறு பூர்ணிமாவிடம் கேட்டுக் கொண்டார்.
பாரீஸிலிருந்து பூர்ணிமா பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது உதவியாளர் அந்த அழைப்புகளை ரசிகையின் அழைப்பு என நினைத்து பாக்யராஜிடம் இணைக்கவில்லை. பின்னர் உண்மை தெரிந்ததும், பாக்யராஜ் அடுத்த அழைப்புக்காக காத்திருந்தார்.
இறுதியாக இருவரும் பேசும் வாய்ப்பு கிடைத்தபோது, பாக்யராஜ் தனது மனதில் இருந்த காதலை வெளிப்படுத்தினார். அதற்கு பூர்ணிமா, முதலில் தனது குடும்பத்தினரிடம் பேசுமாறு கூறியதாக தெரிகிறது. பின்னர் அவரது தாய், தந்தை, தாத்தா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் இருவரின் திருமணம் நடைபெற்றது.
பின்னாளில், பூர்ணிமாவும் மனதளவில் பாக்யராஜை நேசித்திருந்தது தெரியவந்தது. அதனால்தான் வெளிநாட்டிலிருந்தும் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. காதல் நிறைவேறினால் பாரீஸிலேயே ஹனிமூன் செல்ல வேண்டும் என்ற ஆசையையும் அவர் மனதில் வைத்திருந்தாராம்.
திருமணத்திற்குப் பிறகு பாக்யராஜின் பணிப்பளு மற்றும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக அந்த ஆசை உடனடியாக நிறைவேறவில்லை. பின்னர் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகே, குடும்பத்துடன் பாரீஸுக்கு சுற்றுலா சென்று, மனைவியின் நீண்ட நாள் விருப்பத்தை பாக்யராஜ் நிறைவேற்றியதாக அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். எம்ஜிஆர் தலைமையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan