Paristamil Navigation Paristamil advert login

போதை மருந்து கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: மாநிலங்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

போதை மருந்து கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: மாநிலங்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

27 ஆனி 2026 சனி 11:11 | பார்வைகள் : 154


போதைப்பொருள் கடத்தல் கட்டமைப்புளை கண்டறிந்து அழிக்கும் உத்திகளை மாநில அரசு கடைபிடிக்க வேண்டும் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, போதைப்பொருள் கும்பல் மற்றும் முக்கிய கும்பல்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

போதை மருந்து கடத்தல் ஒருங்கிணைப்பு மையத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:  போதை மருந்து கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா இன்று இக்கட்டான காலகட்டத்தில் உள்ளது.  வரும் மூன்று ஆண்டுகளில் போதைப்பழக்கம் நம்மை வெல்கிறதா அல்லது நாம் போதைப்பழக்கத்தை வெல்கிறோமா என்பது தீர்மானிக்கப்படும். அடுத்த 100 ஆண்டுகளில் நமது தேசத்தின் எதிர்காலத்திற்காக, நாம் அனைவரும் அசைக்க முடியாத உறுதியுடன் போதைப்பழக்கத்தை எதிர்த்து போராட வேண்டும்.

இதற்காக அனைத்து அரசுகளும் ஒன்றிணைய வேண்டும். மக்களுக்கு வழிகாட்டுபவர்கள், எதிர்காலத்தை வடிவமைக்கும் இளைஞர்கள் மற்றும் தூய்மையின் சக்தி ஆகியோரையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும். போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் ஒழிப்பதற்கு, இது அனைத்து மாநிலங்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும். போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் மிகப்பெரிய தடையாக உள்ளனர்.  

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், பாதிக்கப்பட்டவர்களிடம் மென்மையான அணுகுமுறையைக் காட்ட வேண்டும். போதைப்பொருள் புழக்கம், செயற்கை போதைப்பொருட்களுக்காகத் தயார் செய்யப்பட்ட ஆய்வகங்கள் ஆகியவற்றை கண்டறிய வேண்டும். கடத்தல்காரர்களின் நெட்வொர்க்கை நாம் உடைக்க வேண்டும். அதனை நாம் அழிக்க வேண்டும். முக்கிய குற்றவாளிகளை  எந்தக் காரணத்திற்காகவும் விட்டுவிடக் கூடாது. 'கண்டறி, ஊகித்து, அழி', இந்த மூன்று குறிக்கோள்களும் அதற்கேற்பத் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.