Paristamil Navigation Paristamil advert login

முன்பு ஒன்றிய அரசு; தற்போது இந்திய அரசு; வார்த்தை பயன்பாட்டுக்கு தவெக முற்றுப்புள்ளி

முன்பு ஒன்றிய அரசு; தற்போது இந்திய அரசு; வார்த்தை பயன்பாட்டுக்கு தவெக முற்றுப்புள்ளி

27 ஆனி 2026 சனி 06:54 | பார்வைகள் : 268


என்.எல்.சி., பங்கு விற்பனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். முந்தைய திமுக அரசு பயன்படுத்திய ஒன்றிய அரசு என்ற தவறான வார்த்தை பிரயோகத்தை கைவிட்டு, இந்திய அரசு என்று கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய திமுக அரசு, மத்திய அரசுடன் பல்வேறு வகையில் மோதல் போக்கை கொண்டிருந்தது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுவது, மத்திய அரசு என்ன செய்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பது என நிலைப்பாடுகளை எடுப்பது திமுகவுக்கு வழக்கமாக இருந்தது. மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வந்ததும், திமுக வேண்டுமென்றே உருவாக்கிய விவகாரம் தான்.

மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் சிறுமைப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், திமுக இவ்வாறு செய்தது. அதைப் பின்பற்றி திமுக ஆதரவு ஜால்ரா ஊடகங்களும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், ஒன்றிய அரசு  என்றே கூவிக் கொண்டிருந்தனர்.

இத்தகைய தவறுக்கு நேற்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், ஒன்றிய அரசு என்ற வார்த்தைகளை தவிர்த்து இந்திய அரசு என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கடிதம்: என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் பங்குகளை சலுகை வாயிலாக விற்பனை செய்ய, இந்திய அரசு எடுத்துள்ள முடிவு, தமிழக அரசிற்கு வருத்தத்தை அளித்துள்ளது.என்.எல்.சி., நிறுவனத்தின் பங்குகளை குறைக்கும் எந்தவொரு முடிவையும், தமிழக அரசு கொள்கை ரீதியாக ஆட்சேபிக்கிறது.

அதன் பங்குகளை விற்பது, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். எனவே, தன் முடிவை இந்திய அரசு மறுபரி சீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடரட்டும் இந்த மாற்றம்

மத்தியில் பாஜ ஆட்சி செய்கிறது என்பதற்காகவே, இந்திய அரசை சிறுமைப்படுத்த திமுக முயற்சித்தது. திமுகவின் நோக்கம், ஒன்றிய அரசு என்ற அந்த வார்த்தையின் உள் அர்த்தம் தெரியாமல் தமிழக வெற்றி கழகத்தில் சிலரும் அவ்வாறே கூறிவந்தனர். முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகும், தி.மு.க., ஆட்சியை பின்பற்றி, அரசு அறிக்கைகளிலும், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்றே குறிப்பிட்டு வந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் தான், நேற்றைய முதல்வரின் கடிதத்தில், இந்திய அரசு என்ற வார்த்தை பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், மக்கள் மனதில் தவறான வார்த்தையை பதிய வைக்க முற்பட்ட  திமுக  திராவிட மாடலின் தீய நோக்கத்துக்கு த.வெ.க., அரசு முடிவு கட்டி உள்ளது. இதை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தொடர வேண்டும் என்பதே தேசபக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது