Paristamil Navigation Paristamil advert login

பொதுமக்களுக்கு இடையூறாக எந்த கொண்டாட்டமும் கூடாது: த.வெ.க., தலைமை எச்சரிக்கை

பொதுமக்களுக்கு இடையூறாக எந்த கொண்டாட்டமும் கூடாது: த.வெ.க., தலைமை எச்சரிக்கை

13 வைகாசி 2026 புதன் 13:06 | பார்வைகள் : 217


பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நடந்து கொள்ளக்கூடாது' என, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு, அக்கட்சி தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலர் பரணி பாலாஜி, தன் பிறந்த நாளை, திருக்கோவிலுார் சாலையில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.

இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆட்சிக்கு வந்த உடனே, த.வெ.க.,வினர் பொது மக்களுக்கு இடையூறு செய்கின்றனர் என, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், த.வெ.க., பொதுச்செயலரான அமைச்சர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:

தமிழக மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை பெற்ற முதல்வர் விஜய், நமக்கு பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார். எனவே, கட்சியினர் தங்கள் பிறந்த நாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாக, மக்களுக்கு இடையூறு தரும் வகையில் சாலையிலோ, மக்கள் கூடும் இடங்களிலோ, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ, பேனர்கள், பதாகைகள் கண்டிப்பாக வைக்கக்கூடாது.

மக்களுக்கு இடையூறாக, எவ்வித கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. பேனர், கொண்டாட்டம் என, எதன் வாயிலாகவும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

த.வெ.க., மாவட்ட செயலர் பரணி பாலாஜி, கடந்த 2024ல் தனக்கு கட்சி பதவி கிடைத்த போதும், 2025ல் தன் பிறந்த நாளின் போதும், இதேபோல, சாலையை மறித்து விழா நடத்தினார்.

அப்போதும், இதேபோன்று அறிக்கை வந்ததே தவிர, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அக்கட்சியினர் கூறுகின்றனர்.