58 மில்லியன் யூரோ அளவிலான சுகாதார காப்பீடு மோசடி – 7 பேர் மீது கடும் குற்றச்சாட்டு!!
27 பங்குனி 2026 வெள்ளி 07:45 | பார்வைகள் : 562
சுகாதார காப்பீட்டு அமைப்பைச் சுற்றிய மிகப்பெரிய மோசடி வழக்கில், 58 மில்லியன் யூரோ அளவிலான நிதி முறைகேடு தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரிஸ் பொது வழக்கறிஞர் லோர் பெக்குவோ அறிவித்துள்ளார். இவர்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி, பணத்தை வெள்ளையாக்குதல் மற்றும் குற்றத் திட்டத்தில் பங்கேற்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றவர்கள் நீதிமன்ற கண்காணிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 300,000 யூரோக்கும் மேற்பட்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 18 சுகாதார மையங்களில் இந்த மோசடி நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பல் சிகிச்சை மையங்கள், 2024 ஆம் ஆண்டு இறுதியில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதன் பின்னர், “பொய்யான சிகிச்சை சேவைகள்” வழங்கப்பட்டதாகக் காட்டி அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. இந்த சேவைகள் பெரும்பாலும் கூடுதல் சுகாதார காப்பீடு பெற்றவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கமான செலவுகளை விட அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்செய் நகரில் உள்ள ஒரு மையத்தில், 2021 ஆம் ஆண்டு இறந்த பல் மருத்துவரின் பெயரில் கூட கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையில், பல நோயாளர்கள் அந்த சிகிச்சைகளை பெறவில்லை என்றும், சிலர் அந்த மையங்களுக்கு ஒருபோதும் சென்றதில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பான விசாரணை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டதுடன், பெயரில்லாத முறையில் வந்த ஒரு தகவலும் இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan