Paristamil Navigation Paristamil advert login

மிக ஆபத்தான ஏவுகணையை உக்ரைனுக்கு அளிக்கும் அமெரிக்கா

 மிக ஆபத்தான ஏவுகணையை உக்ரைனுக்கு அளிக்கும் அமெரிக்கா

29 புரட்டாசி 2025 திங்கள் 11:15 | பார்வைகள் : 1332


ரஷ்ய படையெடுப்பாளர்களை எதிர்க்கும் முயற்சிக்காக நீண்ட தூர Tomahawk ஏவுகணைகளைப் பெறுவதற்கான உக்ரைனின் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் அளிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு Tomahawk ஏவுகணையை அமெரிக்கா விற்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஜெலென்ஸ்கியின் கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும், இறுதி முடிவை ஜனாதிபதி ட்ரம்ப் எடுப்பார் என்றும் வான்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தில் கோரிக்கை வைத்துள்ளதையும் வான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tomahawk ஏவுகணை என்பது 1,550 மைல்கள் தொலைவில் இருக்கும் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. அனைத்து காலநிலையிலும் இந்த ஏவுகணையை பயன்படுத்த முடியும்.

தற்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கடற்படைகள் இந்த ஏவுகணையை பயன்பாட்டில் வைத்துக்கொண்டுள்ளது. ரேடார்களின் பார்வையில் சிக்காமல் பயணிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் துல்லிய தாக்குதலை முன்னெடுக்க முடியும் என்பதுடன், எதிரிகளால் முறியடிக்கவும் முடியாது என குறிப்பிடுகின்றனர்.

Tomahawk ஏவுகணையானது கடற்படை கப்பல்கள், நீர்மூழ்கி மற்றும் நிலப்பரப்பில் இருந்தும் ஏவ முடியும்.

அமெரிக்கா முன்னெடுத்த வளைகுடா போர் மற்றும் 2017ல் சிரியாவிலும் Tomahawk ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு Tomahawk ஏவுகணையை அளிக்க ட்ரம்ப் முடிவு செய்தால், ரஷ்யாவிற்கு கண்டிப்பாக அதிர்ச்சி வைத்தியமாக இருக்கும் என்றே கூறுகின்றனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்