Paristamil Navigation Paristamil advert login

பாதர் கடைசி வரிசையில் நீங்கள் சொல்வது கேட்கவில்லை...!

பாதர் கடைசி வரிசையில் நீங்கள் சொல்வது கேட்கவில்லை...!

23 ஆனி 2019 ஞாயிறு 07:35 | பார்வைகள் : 9565


சர்ச்சில் திருமணம் ஒன்று நடக்க விருந்தது.  பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் உற்றாரும் உறவினரும் கூடியிருந்தார்கள்.
 
கிறித்துவ சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்து வைப்பதற்கு முன் பாதிரியார் ஓர் அறிக்கை விடுவார். 
 
"இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகனான மணமகனையும் இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகளான மணமகளையும் கர்த்தரின் பெயரால் திருமண பந்தத்தில் இணைக்கப் போகிறேன். 
இந்தத் திருமணத்திற்கு யாரிடமிருந்தாவது ஏதாவது ஆட்சேபனை இருந்தால் எழுந்து நின்று கர்த்தரின் முன்னனிலையில் அறிக்கையிடலாம்." 
 
கூட்டம் , ஊசி போட்டால் ஓசை கேட்கும் நிசப்தம். 
 
கடைசி வரிசையில் இருந்த ஒரு அழகான இளம் வயதுப் பெண் எழுந்து கையில் அழும் குழந்தையுடன் கையை ஆட்டியவாறே பாதிரியாரை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள். 
கூட்டத்தில் ஒரே கசமுசா. 
 
அந்தப் பெண் பாதிரியாரை நெருங்கு முன் மாப்பிள்ளைப் பையனின் தாயார் மயங்கி விழுந்தார். (பையன் மேல் அவ்வளவு நம்பிக்கை?). 
 
மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் தங்களுக்குள் குசு குசுவென்று பேசிக் கொண்டார்கள். 
மணமகள் மணமகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் (ஒங்கம்மாவே மயங்கி விழுத்துட்டாங்கன்னா நீ என்ன பண்ணி வச்சிருக்கியோ? மகனே நான்தானா கிடைச்சேன் அல்வா குடுக்க?). 
 
கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது. 
 
பாதிரியார் கைக்குழந்தையுடன் எழுந்து வந்த பெண்ணிடம் கேட்டார், 
"மகளே! உனது ஆட்சேபனை என்ன?" 
அந்தப் பெண் சொன்னாள், 
" ஃபாதர் கடைசி வரிசையில் இருக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்வது எதுவுமே கேட்கவில்லை......!"