Paristamil Navigation Paristamil advert login

மழை

மழை

28 வைகாசி 2016 சனி 18:10 | பார்வைகள் : 13636


 நகரத்திற்கு வெளியே 

செம்பருத்திப் பூக்களுக்கு 
பாலூட்டிக்கொண்டிருக்கிறது 
வைகறை
 
நகரத்திற்கு வெளியே 
காளான்களின் நிழலில் 
பிள்ளையார் எறும்புகள் 
அமைதியாக ஊர்ந்து கொண்டிருக்கின்றன
 
நகரத்திற்கு வெளியே 
மஞ்சள் மூக்குப் பறவை 
அதன் இசையை 
வண்ணங்களால் தீற்றிக்கொண்டிருக்கிறது
 
நகரத்திற்கு வெளியே 
நிர்வாணமாக நீந்தும் சிறுவன் 
ஒரு தாமரையோடு
கரையேறுகிறான்
 
நகரத்திற்கு வெளியே 
மேகங்கள் 
தாய்வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கின்றன
 
நகரத்திற்கு வெளியே 
நிலவு 
பூமியில் 
பாய்விரித்துப் படுத்துத் தூங்குகிறது
 
உன் கையகல நிலம் போதும் 
நானும் 
நிலவோடு 
அங்கேயே தூங்கிவிடுவேன் 
என் நகரத்திற்கு வெளியே
 
- பழநிபாரதி

வர்த்தக‌ விளம்பரங்கள்