அமைச்சர் சரத்குமாரிடம் விசாரணை; குற்றச்சாட்டு நிரூபணமானால் பதவி பறிப்பு
1 ஆடி 2026 புதன் 10:35 | பார்வைகள் : 448
போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து, அமைச்சர் சரத்குமாரிடம், த.வெ.க., குழு விசாரணை நடத்தி வருகிறது.
த.வெ.க., அரசில், தாம்பரம் எம்.எல்.ஏ., சரத்குமார், மனிதவள மேலாண்மை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2022ம் ஆண்டு சென்னையில் நடந்த ஐ.பி.எல்., போட்டியை பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், அவர் கோகைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்திய காட்சி இருப்பதாக, எதிர்க்கட்சியினர் பிரச்னை எழுப்பி வருகின்றனர். ஆனால், உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு மாத்திரையை துாளாக்கி தந்ததாக, அவர் விளக்கம் அளித்தார். இதை ஏற்காமல், தி.மு.க.,வினர் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, சமூக வலைதள பக்கங்களில் பலரும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் மற்றும் ஏழு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இது, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து, அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவுப்படி, இச்சம்பவம் குறித்து த.வெ.க., தலைமை விசாரித்து வருவதாக, எரிசக்தி துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று வெளிப்படையாக அறிவித்தார்.
இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
முதல்வர் விஜய் உத்தரவுப்படி, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், மற்றும் இரண்டு மாவட்ட செயலர்கள் அடங்கிய குழுவினர், அமைச்சர் சரத்குமாரிடம் விசாரித்து வருகின்றனர். அவரை நேரில் அழைத்து ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளனர்.
ஆனால், ஸ்டேடியத்தில் அவரது குழந்தை இருந்ததற்கான போட்டோக்கள் இல்லை. விசாரணைக்கு குடும்பத்துடன் நேரில் ஆஜரான அமைச்சர் சரத்குமார், தன் குழந்தை மீது சத்தியம் செய்து, தனக்கு போதை பவுடர் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்று கூறி அழுதார்.
இதையடுத்து, அவரை அனுப்பி வைத்து விட்டு, நண்பர்களிடம் ரகசிய விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில், அமைச்சர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரது பதவி பறிக்கப்படும். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan