Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவின் அரசியல் பிரவேசம் தொடர்பில் அதிரடி!

சூர்யாவின் அரசியல் பிரவேசம்  தொடர்பில் அதிரடி!

29 ஆனி 2026 திங்கள் 17:47 | பார்வைகள் : 225


தமிழ்நாடு அரசியலில் சினிமா நட்சத்திரங்களுக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருக்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் இப்போது 'தளபதி' விஜய், 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியை பெற்று முதல்வராக பொறுப்பேற்று, தமிழ்நாடு அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில், விஜய்யின் பாதையில் நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வி சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

தளபதி விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் களம் மாறத் தொடங்கியுள்ளன. எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒரு நடிகருக்கு இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு கிடைப்பது இதுவே முதல்முறை எனப் பேசப்படுகிறது. இந்தச் சூழலில், சூர்யாவின் ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகரை ஒரு 'மக்கள் தலைவராக' பார்க்க விரும்புகிறார்கள். சூர்யா, ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தனது 'அகரம் ஃபவுண்டேஷன்' மூலம் செய்துவரும் சமூக சேவைகளால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் நன்கு அறியப்பட்டவர்.

சூர்யாவின் அரசியல் பிரவேசம் பற்றிய வதந்தி காட்டுத்தீபோல் பரவ, சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு சம்பவம் தான் காரணம். 'அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம்' சார்பாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய இயக்கத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர், "காலம் முடிவு செய்துவிட்டது, கடவுள் முடிவு செய்துவிட்டார். சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. அவருக்காக உழைக்க நீங்கள் தயாரா?" என்று ரசிகர்களைப் பார்த்துக் கேட்டார். இதற்கு அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்களும், ஆரவாரமும் எழுந்தன. "நீங்கள் தயாராக இருந்தால், சூர்யா விரைவில் ஒரு பெரிய அதிகாரத்திற்கு வருவது உறுதி" என்று அவர் பேசியது, இப்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஏற்கனவே களத்தில் இறங்கி, முதலமைச்சர் பதவியைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். இப்போது சூர்யா அவருடன் கைகோப்பாரா அல்லது தனியாக ஒரு புதிய பாதையை உருவாக்குவாரா என்ற பேச்சு எழத் தொடங்கியது. இந்த நிலையில் சூர்யா தரப்பில் இருந்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், 'எனக்குக் கட்சி அரசியல் வேண்டாம், ஆனால் எனது சமூக சேவைப் பணிகள் தொடரும்' என்று ஒரு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த ரசிகர் மன்றக் கூட்டத்தில் நிர்வாகி ஒருவர் பேசியது பெரிய சர்ச்சையானதைத் தொடர்ந்து, சூர்யா இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளார். 'காலமும் நேரமும் கூடிவந்தால் சூர்யாவை யாராலும் தடுக்க முடியாது, அவர்தான் வழிநடத்துவார்' என்று அந்த நிர்வாகி பேசியதுதான் இந்த விவாதத்துக்கே காரணம். பின்னர், இது தங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இல்லை என்று சூர்யா ரசிகர் மன்றம் விளக்கம் கொடுத்தது.