Paristamil Navigation Paristamil advert login

குதிரை பேர விவகாரத்தை போட்டுடைத்த வைகோ: முதல்வர் கடும் கோபம்

குதிரை பேர விவகாரத்தை போட்டுடைத்த வைகோ: முதல்வர் கடும் கோபம்

29 ஆனி 2026 திங்கள் 12:39 | பார்வைகள் : 186


ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய, முதல்வர் விஜய் சொன்னதாக அக்கட்சி பொதுச்செயலர் வைகோ கூறியது, முதல்வர் விஜய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கு, தி.மு.க., கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன.

கூட்டணி கட்சிகளை இழுத்ததால், த.வெ.க.,வை 'சோபா மாடல்' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சிக்கிறார்.

அ.ம.மு.க.,வில் வென்ற ஒரே எம்.எல்.ஏ.,வும் த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்ததால், குதிரை பேரம் நடப்பதாக அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் குற்றம் சாட்டினார்.

பெரும்பான்மை பெறுவதற்காக, அ.தி.மு.க., -  எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து, த.வெ.க., பக்கம் இழுப்பதால், 'பொய்க்கால் குதிரை அரசு' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறி வருகிறார்.

இதற்கு, த.வெ.க., அமைச்சர்கள் விளக்கம் அளித்து, மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்; அவர்களை வெற்றி பெற வைக்கிறேன்' என, முதல்வர் விஜய் தன்னிடம் கூறியதாக வைகோ கூறியது, முதல்வர் விஜயை கோபமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

த.வெ.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

தி.மு.க., சின்னத்தில் வென்ற ம.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் இருவரை ராஜினாமா செய்ய வைத்து, த.வெ.க., சின்னத்தில் போட்டியிட வைக்க, முதல்வர் விஜய் விரும்பியது உண்மை தான். அதற்காக, வைகோவை வீடு தேடிச்சென்று பார்த்து பேச்சு நடத்தினார்.

ஆனால், வைகோ தரப்பில் வைக்கப்பட்ட சில கோரிக்கைகள், ஏற்க முடியாத அளவுக்கு இருந்ததால், மாற்று ஏற்பாடாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் துாக்கப்பட்டனர். பழைய பேரத்தை, ஏதோ நேற்று நடந்ததுபோல், வைகோ, தற்போது பேசி விட்டார்.

எதிர்க்கட்சிகளின் குதிரை பேர விமர்சனத்தை விஜயால் எதிர்கொள்ள முடியாத நிலையில், மக்களிடமும் அதிருப்தியை உருவாக்குகிறது. இந்த சூழலில் வைகோ பேச்சு, முதல்வர் விஜயின் 'இமேஜை' சேதமாக்கி விட்டது.

வைகோ பேச்சால், 'எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா பின்னணியில், முதல்வர் விஜய் இருப்பது நிரூபணமாகி விட்டதாக எதிர்க்கட்சிகள் பேச தொடங்கி விட்டன. இதனால், முதல்வர் விஜய் கோபமாகி விட்டார்.

இதுபோல் இனி பேசக் கூடாது என, வைகோ மற்றும் அவரது மகன் துரையிடம் கறாராக சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.