Paristamil Navigation Paristamil advert login

வெப்ப அலை காரணமாக இன்று முதல் வேறுபட்ட போக்குவரத்து நடைமுறைகள் அமுலில்!!

வெப்ப அலை காரணமாக இன்று முதல் வேறுபட்ட போக்குவரத்து நடைமுறைகள் அமுலில்!!

19 ஆனி 2026 வெள்ளி 13:27 | பார்வைகள் : 354


ஓசோன் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரிஸ் மாநகரப் பகுதியின் ஒரு பகுதியில் இன்று முதல் வேறுபடுத்தப்பட்ட போக்குவரத்து (circulation différenciée) நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும், சாலைகளில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வேக வரம்புகளும் குறைக்கப்படுகின்றன.

காவல் துறை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த "கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்" ஒவ்வொரு நாளும் காலை 5:30 மணி முதல் இரவு 11:59 மணி வரை நடைமுறையில் இருக்கும். இதன்படி, Crit'Air வகை 0, 1 மற்றும் 2 மாசுபாட்டு சான்றிதழ் (vignette) கொண்ட வாகனங்கள் மட்டுமே A86 வளையச் சாலையால் வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படும். இருப்பினும், சில வாகனங்களுக்கு சிறப்பு விலக்குகள் வழங்கப்படலாம்.

மேலும், பல்வேறு சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் மோட்டார் வழித்தடங்களில் வேக வரம்புகள் பின்வருமாறு:

  • 130 km/h இருந்து 110 km/h ஆக,
  • 110  km/h இருந்து 90 km/h ஆக,
  • 80 அல்லது 90  km/h இருந்து 70 km/h ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதோடு, 3.5 டன்களுக்கு மேற்பட்ட சரக்கு வாகனங்கள் பரிஸ் பகுதியைத் தவிர்த்து, Île-de-France வெளிப்புற சாலைகள் வழியாகச் செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மேலும் இன்று சுமார் 50 துறைகள் (départements) செம்மஞ்சள் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. "வரும் நாட்களில் கணிக்கப்பட்டுள்ள அதிக வெப்பநிலை மற்றும் சூரிய ஒளி, ஓசோன் செறிவை அதிகரிக்க வழிவகுக்கும். இந்த நிலை பல நாட்களுக்குத் தொடர வாய்ப்புள்ளது," என மாகாண நிர்வாகம் எச்சரித்துள்ளது.