Paristamil Navigation Paristamil advert login

உரையின் தொடக்கம், இறுதி என 2 முறை தேசிய கீதம் பாடியது சரித்திர நிகழ்வு: கவர்னர்

உரையின் தொடக்கம், இறுதி என 2 முறை தேசிய கீதம் பாடியது சரித்திர நிகழ்வு: கவர்னர்

19 ஆனி 2026 வெள்ளி 06:03 | பார்வைகள் : 143


சட்டசபையில் கவர்னர் உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது சரித்திர நிகழ்வு என்று கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. தமிழக பொறுப்பு கவர்னரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தனது உரையை வாசித்தார். இந்த நிலையில், முதல் முறையாக சட்டசபையில் கவர்னர் உரையின் தொடக்கத்திலும், கவர்னர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வு என்று கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை; தமிழக சட்டசபையில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 3  ஆண்டுகளுக்குப் பிறகு கவர்னரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டசபையில் இன்று வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருகிறது.

மேலும், முதல் முறையாக சட்டசபையில் கவர்னர் உரையின் தொடக்கத்திலும், கவர்னர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை பூர்த்தி செய்வதையே ஓர் நிலையான, முன்னுதாரணமான அரசானது தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.