Paristamil Navigation Paristamil advert login

மாஸ்கோ எண்ணெய் நிலையத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோ எண்ணெய் நிலையத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

19 ஆனி 2026 வெள்ளி 06:24 | பார்வைகள் : 227


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து உக்ரைன் வியாழக்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

மாஸ்கோ பிராந்தியத்தின் எரிபொருள் தேவையில் சுமார் மூன்றில் ஒரு பங்கை பூர்த்தி செய்யும் இந்த சுத்திகரிப்பு நிலையம், ஒரு வார காலத்துக்குள் இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

தாக்குதலையடுத்து நகரின் வானில் கரும்புகை சூழ்ந்ததுடன், மாஸ்கோவின் நான்கு முக்கிய விமான நிலையங்களின் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தாக்குதலால் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

எனினும், சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து வெடித்ததில் 2 குழந்தைகள் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே, மாஸ்கோவை நோக்கி வந்த சுமார் 200 ட்ரோன்கள் உட்பட பல்வேறு பிராந்தியங்களில் மொத்தம் 555 உக்ரைன் ட்ரோன்களை ரஷியாவின் வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கான உக்ரைனின் ராணுவ முயற்சியின் ஒரு பகுதியாகும் என உக்ரைன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

“உக்ரைன் தாக்கப்பட்டால், மாஸ்கோவும் தாக்கப்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.

கசான் நகரில் ஆசியான் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுடனான உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்றிருந்த சூழலில், தலைநகரின் மையப்பகுதிக்கு அருகே இடம்பெற்ற இந்த தாக்குதல் ரஷியாவுக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களும் தொடர்கின்றன.

வடகிழக்கு உக்ரைனின் சுமி நகரம் மற்றும் மத்திய பகுதியில் உள்ள டினிப்ரோ நகரில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் 2 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.