Paristamil Navigation Paristamil advert login

நாற்காலியை தேடி செல்ல வேண்டாம் நம்மை தேடி வரும்: திருமா

நாற்காலியை தேடி செல்ல வேண்டாம் நம்மை தேடி வரும்: திருமா

16 வைகாசி 2026 சனி 07:54 | பார்வைகள் : 275


தமிழகத்தில், பா.ஜ., செயல் திட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை மாவட்ட வி.சி.க., பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், திருமாவளவன் பேசியதாவது: இத்தனை போராட்டத்திலும், தீர்மானிக்கிற சக்தியாக நாம் வளர்ந்துள்ளோம். தேர்தலில், எட்டு இடங்களில் போட்டியிட்டு, அனைத்தும் பெற்றி பெறுவோம், நம் கூட்டணி வெற்றி பெறும் என எதிர்பார்த்தோம். ஜனநாயகத்தில் இதுபோன்ற எதிர்பார்ப்பு பொய்த்து போகும் என்பதற்கு இத்தேர்தல் உதாரணம்.

நம்மை எதிர்த்து நின்ற, அ.தி.மு.க., - த.வெ.க.,வை  பெரிதாக விமர்சிக்காமல், பா.ஜ.,வை எதிர்த்தோம்; அதில் வெற்றி பெற்றோம். தமிழகத்தில் தி.மு.க., மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெறக் கூடாது என்ற செயல்திட்டத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. அவரவர் கோணத்தில், அவரவருக்கு வெற்றியை, இத்தேர்தல் தந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகமும் முழுமையான வெற்றி பெறாமல், தனித்து ஆட்சி அமைக்க முடியாமல், கூட்டணி தயவில் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைக்கு, மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். நாம் கணித்தபடி கூட்டணி ஆட்சி அமைந்தாலும், அமைச்சரவையில் இடம்பெற வேண்டாம் என்பதில், தெளிவாக இருக்கிறோம். நாற்காலியை நாம் தேடி செல்ல வேண்டாம்; அது நம்மை தேடி வரும். நாம் ஓரமாக அமர்ந்தாலும், அந்த இடம் மையமாக மாறும்.இவ்வாறு அவர் பேசினார்.