Paristamil Navigation Paristamil advert login

அதானி மீதான குற்றச்சாட்டு; முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா சம்மதம்

அதானி மீதான குற்றச்சாட்டு; முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா சம்மதம்

16 வைகாசி 2026 சனி 06:47 | பார்வைகள் : 292


இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீதான லஞ்ச புகார் மற்றும் மோசடி வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு இறுதியில், 'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனம், இந்தியாவில் சூரிய மின் சக்தி ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக எஸ்.இ.சி., எனும் அமெரிக்க பங்குச்சந்தை  ஆணையம் குற்றஞ்சாட்டியது.

மேலும், தாங்கள் நேர்மையானவர்கள் என பொய் கூறி அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பங்கு சந்தை வாயிலாக நிதி திரட்டியது தொடர்பாக அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்காவின் பங்குப் பத்திர சட்டங்களின், மோசடி தடுப்பு விதிகளை மீறியதாக பங்குப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது.

வழக்கு நடந்து வரும் நிலையில், அதை முடிவுக்கு கொண்டு வர அபராதத் தொகை செலுத்த அதானி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, கவுதம் அதானி 57 கோடி ரூபாயும், சாகர் அதானி 114 கோடி ரூபாயும் அபராதமாக செலுத்த உள்ளனர்.

இத்தொகையை செலுத்துவதன் வாயிலாக இவ்வழக்கு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுத்த குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ தேவையில்லை என கூறப்படுகிறது.

இந்த அபராத தொகை செலுத்துவதன் வாயிலாக இவர்கள் மீது இருந்த கடுமையான குற்றவியல் புகார்களும் கைவிடப்பட வாய்ப்புள்ளது. அதாவது சிறை தண்டனை போன்ற அபாயங்கள் இதனால் நீங்கியுள்ளன.

வெளிநாடுகளில் நடக்கும் லஞ்ச விவகாரங்கள் தொடர்பான சட்டத்தில் சில தளர்வுகளை அதிபர் டிரம்ப் அரசு கொண்டு வந்துள்ளதன் அடிப்படையில், இவ்வழக்கை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா சம்மதித்துள்ளது.

டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்ற போது, வாழ்த்து தெரிவித்த அதானி குழுமம், அமெரிக்காவில் 95,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகவும், 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கால் கென்யா, இலங்கை போன்ற நாடுகளில் அதானி குழுமம் இழந்த நற்பெயரை மீண்டும் பெற இது உதவுவதுடன், சர்வதேச அளவில் இவர்கள் மீண்டும் தொழில் தொடங்க இருந்த தடைகள் தற்போது நீங்கியுள்ளன