Paristamil Navigation Paristamil advert login

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு - நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு  - நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே

17 ஆனி 2026 புதன் 13:47 | பார்வைகள் : 209


அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக எட்டப்பட்டுள்ள தற்காலிக உடன்படிக்கையை நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே வரவேற்றுள்ளார்.

குறிப்பாக, இந்த உடன்படிக்கையின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணைப் பகுதி மீண்டும் திறக்கப்படவுள்ளமையானது சர்வதேச ரீதியில் "ஒரு மிகப்பெரிய முன்னேற்றம்" என அவர் பாராட்டியுள்ளார்.

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை ஊடாக மீண்டும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை சீர்செய்வது உலகளாவிய ரீதியில் மிக முக்கிய நகர்வாக அமையும் எனச் சுட்டிக்காட்டிய மார்க் ரூட்டே, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் கூட்டு முயற்சியின் கீழ் பல நேட்டோ நட்பு நாடுகள் இந்த விவகாரத்திற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு, பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதுடன் டெஹ்ரான் நிர்வாகம் அணு ஆயுதங்களை ஒருபோதும் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போதைய உடன்படிக்கையில் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு முடிவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே இந்தத் தற்காலிக அமைதி உடன்படிக்கை உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடப்பட்டதன் பின்னரே, அணுசக்தி விவகாரம் தொடர்பான பிரதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.