Paristamil Navigation Paristamil advert login

இலங்கை சென்ற இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கை சென்ற இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

10 வைகாசி 2026 ஞாயிறு 17:57 | பார்வைகள் : 192


04 கோடியே 77 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய ஹஷீஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனவும், இவர் விற்பனை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் எனவும் தெரியவந்துள்ளது.

தாய்லாந்தின் பேங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான TF-307 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் அவர் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பொதியை சோதனையிட்ட போது, சொக்லேட் என பொதி செய்யப்பட்ட 15 பொதிகளுக்குள்  மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோகிராம் 778 கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், அவரைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.