Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்

9 வைகாசி 2026 சனி 13:43 | பார்வைகள் : 128


தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமான முறையில் குஷ் ரக போதைப்பொருளை, நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில், சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும், அவர் தனியார் நிறுவனமொன்றின் நிதி முகாமையாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து வருகை தந்த தாய் எயார் ஏசியா (FD-140) விமானம் மூலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.15 மணிக்கு இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் விமான நிலையத்தின் Green Channel ஊடாக வெளியேற முயன்றபோது, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேகநபரின் கைப்பையைச் சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 512 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 51 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.