Paristamil Navigation Paristamil advert login

ஸ்டாலினை ஏமாற்றிய மூவர் அணி: துர்கா விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஸ்டாலினை ஏமாற்றிய மூவர் அணி: துர்கா விசாரணையில் அதிர்ச்சி தகவல்

9 வைகாசி 2026 சனி 10:11 | பார்வைகள் : 123


ஐந்து ஆண்டுகளாக ஒரே மாதிரி, 'ரிப்போர்ட்' கொடுத்து, ஸ்டாலினை ஏமாற்றிய மூவர் அணி குறித்து, அவரது மனைவி துர்கா நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளதால், தி.மு.க.,வில் பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், பல்வேறு புதிய திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்தியதோடு, அவற்றுக்கு புதுப்புது பெயர்கள் சூட்டப்பட்டன.

பெண்கள் ஓட்டுக்காக, மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், புதுமை பெண்கள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இவற்றின் தாக்கம், சட்டம் - ஒழுங்கு, வாக்காளர் மனநிலை உள்ளிட்ட விபரங்கள், உளவுத்துறை வாயிலாக சேகரிக்கப்பட்டன. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நடத்தும் தேர்தல் வியூக நிறுவனம் வாயிலாகவும் தகவல்கள் திரட்டப்பட்டன. இந்த விபரங்கள், ஸ்டாலினுக்கு அவ்வப்போது வழங்கப்பட்டன.

இப்பணியில், சபரீசனின் தேர்தல் வியூக வகுப்பு நிறுவன உயர் அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, முதல்வரின் உதவியாளர் ஒருவர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள், தங்களுக்குள் 'சிண்டிகேட்' அமைத்து, ஒரே மாதிரியான அறிக்கையை ஸ்டாலினுக்கு வழங்கி, ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளனர்.

தேர்தல் தோல்விக்கு பின், ஸ்டாலின் மனைவி துர்கா, ஒரு குழுவை நியமித்து விசாரிக்க துவங்கியபோது, இந்த மூவர் அணி தொடர்பாக, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானதால், தி.மு.க.,வில் திடீர் பரபரப்பு எழுந்துள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

ஐந்து ஆண்டுகளாக, பெண்கள் உள்பட பல தரப்பட்டவர்கள் மத்தியில், தி.மு.க.,வின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக, தவறான அறிக்கை, ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் செயல்பாடுகளால், மாவட்டங்களில் தி.மு.க.,வின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இந்த மூவரும் கூறியுள்ளனர்.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கூறி, அவர்களுக்கு மீண்டும் 'சீட்' வழங்க பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீது சொந்த கட்சியினரே அதிருப்தியில் இருந்ததை மறைத்து விட்டனர். அதை ஐந்து ஆண்டுகளாக ஸ்டாலின் நம்பி வந்துள்ளார்.

இவ்வாறு கூட்டணி அமைத்த மூவர் அணி, தேர்தல் நேரத்தில், அமைச்சர்கள் சொன்ன வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு சீட் வழங்க பரிந்துரைத்துள்ளனர்.

சீட் கிடைத்தவர்களிடம் இருந்து பெருந்தொகையை தேர்தல் வியூக வகுப்பு நிறுவனம் வசூல் செய்துள்ளது. துர்கா நடத்திய விசாரணையில், இந்த அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.

இந்த பிரச்னையை திசை திருப்புவதற்காக, தேர்தல் வியூக நிறுவனத்தில் பணிபுரிந்த, 200க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மூவர் அணி தன்னை ஏமாற்றியதை, இப்போதுதான் ஸ்டாலினும் சபரீசனும் உணர தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.