Paristamil Navigation Paristamil advert login

கேரள முதல்வர் பதவியை பிடிப்பதில் மல்லுக்கட்டும் வேணுகோபால் - சதீஷன்

கேரள முதல்வர் பதவியை பிடிப்பதில் மல்லுக்கட்டும் வேணுகோபால் - சதீஷன்

7 வைகாசி 2026 வியாழன் 09:18 | பார்வைகள் : 283


கேரள சட்டசபை தேர் தலில், காங்., அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் பதவியை பிடிப்பதில், அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் - எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீஷன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், ஆட்சியை கைப்பற்றியும் கொண்டாட முடியாத நிலையில் அக்கட்சி தொ ண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 140 தொகுதிகளில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி, 102ல் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த இடது ஜனநாயக முன்னணி, 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

கேரளாவில், 10 ஆண்டுகளுக்கு பின் காங்., ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், தற்போது அக்கட்சியில் முதல்வர் பதவியை பிடிப்பதில் மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

கேரளாவின் ஆலப்புழா லோக்சபா தொகுதி எம்.பி.,யான காங்., மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், முதல்வர் பதவியை பெற கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் போன்ற கட்சியின் மேலிட தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் அவர், சட்டசபை தேர்தலில் வென்ற காங்., - எம்.எல்.ஏ.,க்கள், 63 பேரில், 47 பேர், தான் முதல்வராக ஆதரவு தெரிவிப்பதாக கூறி உள்ளார்.

அதே சமயம், 'காங்., கூட்டணியின் வெற்றிக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீஷனின் அயராத உழைப்பே காரணம். அவரது செயல்பாடுகளால் தான் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அவரை முதல்வராக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அது கட்சி செய்யும் வரலாற்று பிழை' என, அவரது ஆதரவாளர்கள் கட்சி மேலிட தலைவர்களை வலியுறுத்தி உள்ளனர்.

வி.டி.சதீஷன் முதல்வராவதற்கு கூட்டணி கட்சிகளான முஸ்லீம் லீக், கேரள ஜோசப் காங்., போன்ற முக்கிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, முதல்வரை தேர்வு செய்ய காங்., மத்திய பார்வையாளர்களாக சச்சின் பைலட், கே.ஜே.ஜார்ஜ், கன்னையா குமார், இம்ரான் பிரதாப்கர்ஹி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவுக்கு இன்று வரும் அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களிடம் தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்க உள்ளனர். அதனடிப்படையில், கார்கேவுக்கு அறிக்கை அனுப்ப உள்ளனர். முதல்வர் பதவிக்கான ரேசில் கே.சி.வேணுகோபால் - வி.டி.சதீஷன் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், கார்கே, ராகுல் ஆகியோர் யாரை தேர்ந்தெடுக் கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.