Paristamil Navigation Paristamil advert login

இந்தியா - வியட்நாம் உறவில் புதிய மைல்கல் முக்கிய துறைகளில் 13 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - வியட்நாம் உறவில் புதிய மைல்கல் முக்கிய துறைகளில் 13 ஒப்பந்தங்கள் கையெழுத்து

7 வைகாசி 2026 வியாழன் 08:14 | பார்வைகள் : 296


இந்தியா - வியட்நாம் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, அரியவகை கனிம வளங்கள் உள்ளிட்ட துறைகளில், 13 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் அதிபராக டோ லாம் சமீபத்தில் பதவியேற்றார். தன் முதல் அரசுமுறை பயணமாக நம் நாட்டிற்கு நேற்று முன்தினம் வந்தார்.

பிரதமர் மோடியை நேற்று சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சு நடத்தினார். அப்போது இரு நாட்டு உறவை, 'மேம்பட்ட விரிவான கூட்டாண்மை' என்ற அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

இந்த சந்திப்பை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, அரியவகை கனிம வளங்கள், கல்வி, வங்கி பரிவர்த்தனை, 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனை, மருந்து பொருட்கள், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில், 13 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இரு நாடுகளும் உறுதி பூண்டன.

இதை தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது:

நம் நாட்டுக்கு வியட்நாம் மிக முக்கியமான நட்பு நாடு. 10 ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டின் முதல் விரிவான கூட்டாண்மை நாடாக வியட்நாம் இருந்தது. அப்போது முதலே இரு தரப்பு நட்புறவு வேகமாகவும், விரிவாகவும் வளர்ந்து வருகிறது.

தற்போது இரு தரப்பு நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மேம்பட்ட விரிவான கூட்டாண்மையை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். கலாசாரம், மக்கள் தொடர்பு, பாதுகாப்பு, வினியோக தொடர் என ஒவ்வொரு துறையிலும் இரு தரப்பு கூட்டுறவு புதிய உச்சத்தை தொடப் போகிறது.

இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர வர்த்தகத்தை இரட்டிப்பாக்க உள்ளோம். 2030க்குள் வர்த்தகத்தை 2.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

மருந்து பொருட்கள் விற்பனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், வியட்நாமில் இனி இந்திய மருந்துகள் எளிதாக கிடைக்கும். நம் நாட்டின் வேளாண் பொருட்கள், மீன் வளம் ஆகியவற்றை இனி வியட்நாமுக்கு எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும்.

வெகு விரைவில் இந்திய திராட்சைகள் மற்றும் மாதுளம் பழங்களை வியட்நாம் மக்கள் ருசி பார்க்க போகின்றனர். யாரோ ஒருவருக்காக நீங்கள் ஏற்றி வைக்கும் விளக்கு தீபம், உங்கள் பாதைக்கும் வெளிச்சத்தை காட்டும் என புத்தர் போதித்து இருக்கிறார்.

அந்த வகையில், வியட்நாமுக்கு நாம் அளிக்கும் ஆதரவு, நமக்கும் வேகமான வளர்ச்சியை தரும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

முக்கிய ஒப்பந்தங்கள்

* இரு தரப்பு வர்த்தகத்தை 2030க்குள் 2.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த முடிவு 
* இந்தியாவின் யு.பி.ஐ., மற்றும் வியட்நாமின் அதிவேக பணப்பரிவர்த்தனைகளை இணைக்க உடன்பாடு 
* இந்திய மருந்துகள், திராட்சை, மாதுளம் பழங்கள் வியட்நாமுக்கு ஏற்றுமதி 
* இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உறுதி 
* அரிய கனிம வளங்கள், எரிசக்தி துறைகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள இரு நாடுகளும் திட்டம்