Paristamil Navigation Paristamil advert login

ஐ - பேக் நிறுவனத்தை கழற்றிவிட்டது சமாஜ்வாதி

ஐ - பேக் நிறுவனத்தை கழற்றிவிட்டது சமாஜ்வாதி

7 வைகாசி 2026 வியாழன் 07:00 | பார்வைகள் : 227


மேற்கு வங்க தேர்தலில் திரிணமுல் காங்., கட்சி தோல்வி அடைந்த நிலையில், தேர்தல் வியூகம் வகுத்து தரும், 'ஐ - பேக்' நிறுவனத்தின் ஆலோசனை பெறும் திட்டத்தை சமாஜ்வாதி கட்சி முழுமையாக கைவிட்டுள்ளது.

நாடு முழுதும் முக்கியமான அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை, 'ஐ - பேக்' என்ற நிறுவனம் வகுத்து தரும் பணியை செய்து வருகிறது.

இதன் முதன்மை நிறுவனராக இருந்த பிரசாந்த் கிஷோர், பீஹாரில் தனியாக ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கிய பின், அதன் பொறுப்புகளை தன் சகாக்களிடம் ஒப்படைத்தார்.

தற்போது பிரதீக் ஜெயின் என்பவர், 'ஐ - பேக்'கின் இணை நிறுவனராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில், 2021 தேர்தலில் தி.மு.க.,வுக்கு இந்நிறுவ னமே தேர்தல் ஆலோசனை களை வழங்கியது.

சர்ச்சை சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்கத் தேர்தலில் திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜிக்கு ஆலோசனை வழங்கியது. நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கில், 'ஐ - பேக்' நிறுவனத்தின் கொல்கட்டா அலுவலகம் மற்றும் இணை நிறுவனர் பிரதீக் ஜெயின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

அப்போது சோதனை நடக்கும் இடத்திற்கு மம்தா பானர்ஜி நேரடியாக வந்து தடுத்ததால், பெரும் சர்ச்சை வெடித்தது.

கொல்கட்டாவில் சோதனை நடந்து கொண்டிருந்த அதே நாளில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சி தலைவர்களுக்கு, 'ஐ - பேக்' நிறுவன குழுவினர், தேர்தல் உத்திகள் குறித்து விளக்கி கொண்டிருந்தனர்.

இந்தச் சூழலில், 'ஐ - பேக்' நிறுவனத்தின் ஆலோசனையை பெறும் திட்டத்தை கைவிடப் போவதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் வரும் 2027 சட்டசபை தேர்தலுக்காக, 'ஐ - பேக்' நி றுவனத்துடன் கைகோர்த்து இருந்தோம். சில மாதங்கள், எங்களுக்காக அவர்கள் உழைத்தனர். தற்போது, 'ஐ - பேக்' நிறுவனம் கேட்கும் தொகையை செலுத்தும் அளவுக்கு எங்களிடம் போதிய நிதி இல்லை.

சிக்கல் எனவே, அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டோம். சமீபத்திய தேர்தல் தோல்விகளை இதனுடன் தொடர்புப்படுத்த வேண்டாம். போதிய நிதி இல்லாத காரணத்தால் தான், 'ஐ - பேக்' நிறுவன ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டோம். அது தான் யதார்த்தமான உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கு வங்கம், தமிழகம் என இரு மாநில சட்டசபை தேர்தல்களில், 'ஐ - பேக்' நிறுவனத்தின் தேர்தல் உத்திகள் தோல்வியை கொடுத்ததால் தான் அகிலேஷ் யாதவ், இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தவிர, அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கும் இந்த தருணத்தில், 'ஐ - பேக்' உடன் கைகோர்ப்பது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக பேசப்படுகிறது.