Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் இணையவழி இனவெறுப்பு - மனித உரிமைகள் அமைப்பு அறிவிப்பு

கனடாவில் இணையவழி இனவெறுப்பு - மனித உரிமைகள் அமைப்பு அறிவிப்பு

6 வைகாசி 2026 புதன் 17:50 | பார்வைகள் : 415


கனடாவில் இணையவழி இனவெறுப்பு அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

கனடாவில் பெண்கள், சிறுபான்மையினர் முதலானோருக்கு எதிரான இணையவழி அல்லது ஒன்லைன் வெறுப்புப் பேச்சின் அளவு அதிகரித்து வருவதை விவரிக்கும் ஒரு அறிக்கையை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த செய்திகள், கனடாவின் அரசாங்கக் கொள்கையையும், கனடாவில் பல தசாப்தங்களாக சமூகத் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படாததையும் சுட்டிக் காட்டுவதற்கு பதிலாக, அரசாங்கங்களின் பொருளாதாரத் தோல்விகள் மற்றும் உலகளாவிய நவீன தாராளவாத ஒழுங்கிற்கான பழியை, சிறுபான்மை சமூகங்கள் மீது சுமத்துகின்றன என்கிறது ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை.

இணையத்தளத்தில் நிகழும் வெறுப்புக் குற்றங்கள் கனேடிய அரசாங்கத்தால் பெருமளவில் ஒழுங்குபடுத்தப்படாமல் உள்ளன.

இந்நிலையில், முன்வைக்கப்பட்டுள்ள மசோதா C 63, இணையவழி வெறுப்புப் பேச்சுக்குக் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துகிறது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இணையவழி வெறுப்புப் பேச்சைக் கையாள்வதற்கான ஒரு கட்டமைப்பை நிர்வகிக்க, ஒரு டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையரையும் நியமிக்கும்.

என்றாலும், இந்த மசோதா மிகவும் பரந்ததாகவும், தெளிவற்றதாகவும் இருப்பதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அது அரசியல் உள்நோக்கம் கொண்ட துன்புறுத்தல்களுக்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

கனடா, சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை (CEDAW) மற்றும் அனைத்து விதமான இனப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை (CERD) ஆகிய இரண்டு உடன்படிக்கைகளிலும் கையெழுத்திட்டுள்ளது.

இந்த சர்வதேச உடன்படிக்கைகள், பெண் வெறுப்பு அல்லது இனவெறி வெறுப்புப் பேச்சைத் தூண்டுவதற்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.