Paristamil Navigation Paristamil advert login

குடியிருப்பு கட்டிடம் மீது மோதிய விமானம் - இருவர் பலி

குடியிருப்பு கட்டிடம் மீது மோதிய விமானம் - இருவர் பலி

6 வைகாசி 2026 புதன் 15:19 | பார்வைகள் : 707


தென்கிழக்கு பிரேசிலின் பெலோ ஹொரிசோன்டே (Belo Horizonte) நகரில் நிகழ்ந்த ஒரு கோர விமான விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று, குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உள்ளூர் தீயணைப்புத் துறை மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அளித்துள்ள தகவலின்படி-

பெலோ ஹொரிசோன்டே நகரின் பரபரப்பான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அந்தச் சிறிய விமானம் பறந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு கட்டிடத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஏனைய 3 பயணிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானம் மோதிய வேகத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. விமானம் மோதிய கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விமானத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.