Paristamil Navigation Paristamil advert login

நீதிபதி - கெஜ்ரிவால் இடையே வலுக்கும் மோதல்!

நீதிபதி - கெஜ்ரிவால் இடையே வலுக்கும் மோதல்!

6 வைகாசி 2026 புதன் 12:01 | பார்வைகள் : 509


டில்லி மதுபான கொள்கை வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா முன் ஆஜராக முடியாது என, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய நிலையில், நீதிமன்றத்திற்கு உதவ மூன்று மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கை தொடர்ந்து நடத்தப்போவதாக டில்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

டில்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் இருந்து டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேர் கடந்த பிப்ரவரி 27ல் டில்லி விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்னர்.

இதற்கு எதிராக சி.பி.ஐ., சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது.

ஆனால், 'நீதிபதி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என்பதாலும், அவரது பிள்ளைகள் மத்திய அரசின் வழக்கறிஞர்களாக பணியாற்றுவதாலும் இந்த வழக்கை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா விசாரிக்க கூடாது' என, கூறி டில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வு முன்பாகவே விசாரிக்கப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைக்கும் சந்தேகங்கள் ஏற்புடையதாக இல்லை' எனக் கூறி வழக்கு விசாரணையில் இருந்து விலக நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த நீதிபதி முன்பாக வழக்கு விசாரணைக்காக ஆஜராக போவதில்லை என்றும் இதற்காக சிறை செல்லவும் தயாராக இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிஷோடியா ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்ததது. அப்போது, 'இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூன்று மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வரும் 8ம் தேதி அந்த வழக்கறிஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் சி.பி.ஐ., தரப்பு வாதங்களை நீதிமன்றம் கேட்கும்' என, நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா தெரிவித்தார்.

விசாரணையைப் புறக்கணித்துள்ள நிலையில், நீதிமன்றம் சுயமாக மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கை நடத்த முடிவு செய்திருப்பது சட்டத்துறை வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.