Paristamil Navigation Paristamil advert login

சிறப்பான எதிர்கட்சியாக தி.மு.க., செயல்படும்

சிறப்பான எதிர்கட்சியாக தி.மு.க., செயல்படும்

5 வைகாசி 2026 செவ்வாய் 13:34 | பார்வைகள் : 344


தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிக்கை :

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். கடந்த ஐந்தாண்டு காலத்தில், ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழகத்தை அனைத்து வகையிலும் உயர்த்தினோம்.

தேர்தல் களத்தில், எங்கள் சாதனைகளை சொல்லியே ஓட்டு கேட்டோம். மக்களுக்கு செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடர ஓட்டு கேட்டு, நாங்கள் பிரசாரம் செய்தோம். தி.மு.க., தலைமையிலான, மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து ஓட்டளித்த, தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி. ஓட்டளித்தவர்களுக்கு மட்டுமல்ல; ஓட்டளிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன்.

என் மனசாட்சி படி செயல்பட்டேன். என் சக்தியை மீறி உழைத்தேன். என்னை போன்றே களத்தில் உழைத்த, என் உயிரோடு கலந்திருக்கும், தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி. எங்கள் தோளோடு தோள் நின்ற, கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி.

என் அரசியல் பொது வாழ்வில், அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே, லட்சியமும், கொள்கையும் தான் முக்கியமே தவிர, வெற்றி, தோல்விகள் மட்டுமல்ல என, செயல்படக்கூடியவன் நான். அதனால், தி.மு.க.,வின் அரசியல் பயணம், தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்கு சிறப்பான ஆளும்கட்சியாக செயல்பட்ட தி.மு.க., இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்.