Paristamil Navigation Paristamil advert login

இந்தியா - இத்தாலி இடையே புதிய ஒப்பந்தம்

இந்தியா - இத்தாலி இடையே புதிய ஒப்பந்தம்

1 வைகாசி 2026 வெள்ளி 07:43 | பார்வைகள் : 218


இந்தியா - இத்தாலி பரஸ்பரம் நன்மை அடையும் வகையில், ராணுவ தளவாடங்களை கூட்டாக உற்பத்தி செய்வதற்கு முன்வந்துள்ளன. மாறிவரும் உலகளாவிய பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இத்தாலி ராணுவ அமைச்சர் குயிடோ கிராஸேட்டோ, அரசுமுறை பயணமாக டில்லி வந்துள்ளார். நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை  சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு திட்டம் 2026 - 27 வெளியிடப்பட்டது. அதன்படி இரு நாடுகளும் பலன் அடையும் வகையில் ராணுவ தளவாடங்களை நம் நாட்டிலேயே கூட்டாக உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ''மேற்காசியாவில் நிலவும் போர் உள்பட உலகளாவிய மற்றும் பிராந்திய அளவிலான பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தோம். நம் நாட்டின், 'சுயசார்பு இந்தியா' திட்டம் மற்றும் இத்தாலியின் ராணுவ ஒத்துழைப்பு முன்னெடுப்பு ஆகியவற்றின் கீழ் இரு நாடுகளும் பலன் பெறும் வகையில் பரஸ்பர ராணுவ தொழில் கூட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசித்தோம்,'' என்றார்.

அமைதி, ஸ்திரத்தன்மை, சுதந்திரம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டதாக இரு நாடுகளின் உறவு நீடிக்கிறது' என, நம் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பழமையான கடல்சார் வர்த்தக பாரம்பரியத்தை கொண்ட இரு நாடுகளும், கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களில் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன. குறிப்பாக, குருகிராமில் உள்ள இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கான தகவல் ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம் முக்கிய தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த சந்திப்பின் போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.