Paristamil Navigation Paristamil advert login

அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய் அரசியல் எதிர்காலம் சூனியமாகும்; திருமாவளவன்

அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய் அரசியல் எதிர்காலம் சூனியமாகும்; திருமாவளவன்

16 பங்குனி 2026 திங்கள் 11:24 | பார்வைகள் : 318


அழுத்தத்துக்கு அடி பணிந்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், த.வெ.க., தலைவர் விஜய் இணைந்தால், அவரது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும், என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு பேச்சு சுமுகமாக நடக்கிறது. கட்சிகளிடையே பேச்சு நடக்கும்போது, மாறுபட்ட கருத்துகள் வரத்தான் செய்யும். கம்யூனிஸ்டுகள் கூடுதல் தொகுதிகளை கேட்பதால், தி.மு.க., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. பொதுத் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுமா என்பது ஓரிரு நாளில் தெரியும்.

அதே நேரத்தில், எதிர்தரப்பில், அ.தி.மு.க., - பா.ஜ., இன்னும் பேச்சு துவக்கவில்லை; கூட்டணி அமைக்கவே, போராடிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2021 தேர்தலில், தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளை இழுக்க முயற்சித்து, தே.மு.தி.க.வை இழந்துள்ளனர்.

தற்போது நடிகர் விஜயின், த.வெ.க,வை, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைக்க முயற்சிக்கின்றனர். அழுத்தம் கொடுத்து, விஜயை அடிபணிய வைக்க முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்கு விஜய் அடிபணிந்தால், அவரது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்.

பிற மாநிலங்களில், பா.ஜ., மற்றும் சங்பரிவார் அமைப்புகள், நயவஞ்சகமாக எதிர்க்கட்சிகளை வளைத்து போடுவது அல்லது அவதுாறு பரப்பி எதிர்ப்பது என்ற யுக்தியை கையாளுகின்றனர். அதை தமிழகத்திலும் கையாளுகின்றனர்.

காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து நடத்தும் போராட்டம், தேர்தலுக்கானது அல்ல. பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டமும் இல்லை. உலக அமைதியை வலியுறுத்தும் போராட்டம்.இவ்வாறு அவர் கூறினார்.