Paristamil Navigation Paristamil advert login

டில்லி சிபிஐ அலுவலகத்தில் 3வது முறையாக விஜய் ஆஜர்

டில்லி சிபிஐ அலுவலகத்தில் 3வது முறையாக விஜய் ஆஜர்

15 பங்குனி 2026 ஞாயிறு 13:58 | பார்வைகள் : 1068


கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, இன்று (மார்ச் 15) 3வது முறையாக டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டு வருகின்றனர்.

கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு, சென்னையில் இருந்து டில்லிக்கு தனி விமானம் மூலம் வந்தார். அவருடன் த.வெ.க., நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ஜெகதீஷ் உள்ளிட்ட, ஏழு பேர் வந்தனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 15) காலை 10.20 மணியளவில் டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தயார் செய்து வைத்து இருந்த பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அதிகாரிகளின் கேள்விகளுக்கு தனது தரப்பு பதில் விஜய் பதில் அளித்து வருகிறார். கடந்த முறை விசாரணையை போலவே சிபிஐ அலுவலகம் வரை காரில் விஜய் சென்றார். அப்பகுதியில் விஜயை புகைப்படம் எடுப்பற்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே இரு நாட்கள், டில்லியில் விஜயிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியுள்ளது. மூன்றாவது முறையாக இன்றும், அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை, நாளையும் நடக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விசாரணை தொடர்ந்தால் இன்றும் விஜய் டில்லி ஹோட்டலில் தங்க வேண்டியிருக்கும்.