Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் கடும் பனிப்புயல் - விமான சேவைகள் பாதிப்பு

 கனடாவில் கடும் பனிப்புயல் - விமான சேவைகள் பாதிப்பு

13 பங்குனி 2026 வெள்ளி 06:35 | பார்வைகள் : 1299


கனடாவின் ஒன்டாரியோ முதல் நியூஃபவுண்ட்லேண்ட் வரையிலான பெரும் பகுதிகளில் நிலவும் கடும் வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சில பகுதிகளில் "மிக முக்கியமான உறைபனி மழை" (Critical Freezing Rain) பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாண்ட்ரியலில் 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான உறைபனி மழை பெய்ய வாய்ப்புள்ளதால், 70 ஆண்டுகளுக்கு முந்தைய (19.33 மி.மீ) சாதனையை இது முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டாவா மற்றும் கியூபெக் நகரங்களிலும் 24 மணிநேரத்தில் 40 மி.மீ வரை உறைபனி மழை பெய்யக்கூடும். மாண்ட்ரியல்-ட்ரூடோ விமான நிலையத்தில் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒட்டாவா மற்றும் கியூபெக் சர்வதேச விமான நிலையங்களிலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒன்டாரியோவில் புயல் காரணமாக சுமார் 33,000-க்கும் அதிகமான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. கியூபெக் மாகாணத்திலும் சுமார் 10,000 வாடிக்கையாளர்கள் மின்சார பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

டொராண்டோ உள்ளிட்ட தெற்கு ஒன்டாரியோ பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. உறைந்த நிலையில் உள்ள தரைப்பகுதி நீரை உறிஞ்சும் தன்மையை இழந்துள்ளதால், சாலைகளில் வெள்ளம் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் கனடா அமைப்பு, மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், வானிலை மாற்றங்களை உடனுக்குடன் கவனிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.