Paristamil Navigation Paristamil advert login

கல்வி அமைச்சகத்தில் பெரும் தரவுகள் திருட்டு; 2.43 இலட்சம் ஆசிரியர்களின் தகவல்கள் கசிவு!

கல்வி அமைச்சகத்தில் பெரும் தரவுகள் திருட்டு;  2.43 இலட்சம் ஆசிரியர்களின் தகவல்கள் கசிவு!

24 பங்குனி 2026 செவ்வாய் 07:45 | பார்வைகள் : 535


தேசிய கல்வி அமைச்சின் தரவுத்தளத்தில் இடம்பெற்ற சைபர் தாக்குதலின் மூலம் சுமார் 2,43,000 கல்வி பணியாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக 23ம் திகதி திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

திருடப்பட்ட தரவுகளில் பணியாளர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் அவர்கள் பணியில் இல்லாத கால இடைவெளிகளும் அடங்குகின்றன. இத்தகவல்கள் அமைச்சின் “Compas” எனப்படும் மனிதவள மேலாண்மை மென்பொருளில் சேமிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பயிற்சி ஆசிரியர்களின் வழிகாட்டிகளின் பெயர்கள் மற்றும் அலுவலக தொலைபேசி எண்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த தரவு கசிவு மார்ச் மாதம் 15ம் திகதி ஏற்பட்டதாகவும், மார்ச் மாதம் 19ம் திகதி அமைச்சின் தகவல் பாதுகாப்பு மையத்தால் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “Hexdex” எனும் பெயரில் செயல்படும் குழுவொன்று இந்த தரவுகளின் மாதிரியை இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேசிய தகவல் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தரவு பாதுகாப்பு ஆணையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதுடன், பரிசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “Compas” அமைப்பிற்கான அணுகல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக தாக்குதல்களைத் தடுக்க அனைத்து கணினி அமைப்புகளிலும் தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கத்தோலிக்க கல்வி நிர்வாக அமைப்பும் தனித்த தாக்குதலுக்கு உள்ளாகி 15 லட்சம் பேரின் தகவல்கள் கசிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.