Paristamil Navigation Paristamil advert login

லிபிய நிதி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுக்கும் முன்னாள் ஜனாதிபதி சார்கோசி!!

லிபிய நிதி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுக்கும் முன்னாள் ஜனாதிபதி சார்கோசி!!

18 பங்குனி 2026 புதன் 21:14 | பார்வைகள் : 390


பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், முன்னாள் குடியரசுத் தலைவர் நிக்கோலா சார்கோசி தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீண்டும் முற்றாக மறுத்துள்ளார். 

2007ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துடன் தொடர்புடைய லிபிய நிதி விவகாரத்தில் தாம் எந்த தவறும் செய்யவில்லை என அவர் வலியுறுத்தினார். தன்னுள் ஆழமாக பதிந்துள்ள உண்மையை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு விசாரணையின் போது, குறுகிய மற்றும் அமைதியான தொடக்கக் கருத்து உரையையே அவர் வழங்கினார். முதல் நீதிமன்ற தீர்ப்பில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ததற்கான காரணம், தாம் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதையே என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றஞ் சாட்டப்பட்டவர்களும் தங்கள் தரப்பு நியாயத்தை கூறினர். பிராங்கோ-அல்ஜீரிய இடைத்தரகர் Alexandre Djouhri தாம் சதியில் சிக்கியதாகக் கூறினார். அதேவேளை, முன்னாள் அமைச்சர் Brice Hortefeux தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என வலியுறுத்தினார்.

மேலும், லிபிய அதிகாரி Abdallah Senoussiயை திட்டமிட்டு சந்தித்ததாக கூறப்படுவது தவறானது என்றும், தன் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றும் Brice Hortefeux தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஊகங்களின் அடிப்படையில் அமைந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.