Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கையடக்க தொலைப்பேசி பணப் பரிமாற்றங்களுக்கு தீவிர கண்காணிப்பு

இலங்கையில் கையடக்க தொலைப்பேசி பணப் பரிமாற்றங்களுக்கு தீவிர கண்காணிப்பு

18 பங்குனி 2026 புதன் 17:43 | பார்வைகள் : 321


இசிகேஷ் மற்றும் எம்கேஷ் (eZcash and mCash) போன்ற இலத்திரனியல் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பணப்பரிமாற்றங்களைத் தடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேயபால அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

அதற்கமைய சட்டவிரோத பணப்பரிமாற்றங்களை கண்காணிப்பதற்கும் அவற்றில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை பொலிஸ் தலைமையகம், இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் ஒன்றிணைந்து ஒரு புதிய தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இலகுவாகப் பணப்பரிமாற்றம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் தலைமையில் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கையடக்க தொலைப்பேசி பணப்பரிமாற்றங்கள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும்.