Paristamil Navigation Paristamil advert login

சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திர விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பு!

சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திர விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பு!

4 மாசி 2026 புதன் 12:56 | பார்வைகள் : 505


2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் அவற்றை மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் இந்த மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இந்த மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

நாடு முழுவதும் 3,545 நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் தற்போது அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதிபர்கள், வலயக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளரிடமிருந்து இவற்றைத் பெற்றுக்கொள்ள வேண்டும்.


மேலும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஏற்கனவே அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் காணப்படின், பாடசாலை அதிபர்கள் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று, தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்