Paristamil Navigation Paristamil advert login

தனுஷோட சகோதரியா மிருணாள் தாக்கூர்?

தனுஷோட சகோதரியா மிருணாள் தாக்கூர்?

3 மாசி 2026 செவ்வாய் 15:15 | பார்வைகள் : 396


சினிமா உலகில் நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்றாலே, அதனைச் சுற்றி வதந்திகள் உருவாகுவது புதிதல்ல. குறிப்பாக சமூக வலைதளங்கள் வேகமாக வளர்ந்த இந்த காலத்தில், ஒரு சிறிய தகவல் கூட உண்மை–பொய் பார்க்காமல் காட்டுத்தீ போல பரவி விடுகிறது. அந்த வகையில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூரை குறித்து பரவிய திருமண வதந்தி, ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில், தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும், அதுவும் காதலர் தினத்தில் இருவரும் திருமண பந்தத்தில் இணைவார்கள் என்றும் செய்திகள் பரவத் தொடங்கின. எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையிலும், இந்த தகவல் வேகமாக வைரலானது. ரசிகர்கள் ஒரு பக்கம் அதிர்ச்சி, இன்னொரு பக்கம் ஆர்வம்… “உண்மையா?”, “இதுவரை வெளியில் வராத காதலா?” என்ற கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்தன.

இந்த வதந்திகள் உச்சத்தைத் தொடும் நேரத்திலும், தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் எந்தவித விளக்கமும் அளிக்காமல் மௌனமாக இருந்தனர். இந்த மௌனம் தான், வதந்திகளுக்கு மேலும் வலுவூட்டியது. சமூக வலைதளங்களில் கற்பனை கதைகள் ஒன்றின் மேல் ஒன்று சேர்ந்து, ஒரு முழுமையான “திருமண கதை”யாகவே மாறியது.

இந்நிலையில், இறுதியாக மிருணாள் தாக்கூர் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசினார். அவர் கூறிய வார்த்தைகள், இதுவரை பரவிய அனைத்து செய்திகளையும் ஒரே நொடியில் பொய்யாக்கின. “என்னைப் பற்றியும், தனுஷை பற்றியும் நீங்கள் கேட்கும் அனைத்துமே பொய். எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. எப்போதும் தனுஷ் எனக்கு ஒரு சகோதரர் மட்டுமே.” என்று உறுதியாக கூறினார் மிருணாள்.

மிருணாள் தாக்கூரின் இந்த விளக்கம், தனுஷ் – மிருணாள் உறவு குறித்து பரவிய காதல், திருமணம், ரகசிய உறவு போன்ற அனைத்து கற்பனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. ஒரு நடிகருடன் இணைத்து பெயர் வந்ததற்காக மட்டும் உருவாக்கப்பட்ட இந்த வதந்தி, எவ்வளவு எளிதாக ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்க முடியும் என்பதற்கான சாட்சி இது.

இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்பதையும், நடிகர்கள் மௌனமாக இருப்பது ஒப்புதல் அல்ல என்பதையும் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. மிருணாள் தாக்கூர் தைரியமாக உண்மையைச் சொல்லி, வதந்தி பரப்பும் வாய்களுக்கு நேரடியாக ‘பூட்டு’ போட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்