Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் உடனடியாக ரத்து!

இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் உடனடியாக ரத்து!

6 மார்கழி 2025 சனி 12:54 | பார்வைகள் : 143


அரச உத்தியோகத்தர்களுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அனுமதிப்பதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, புதிய விடுமுறை விண்ணப்பங்கள் அல்லது விடுமுறை நீடிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த வேண்டும் என அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு குறித்த சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார்.

சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சம் 5 வருடங்களுக்கு உட்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பொது நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய, அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை அனுமதிப்பதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு விடுமுறைகளைப் பெற்றுள்ள உத்தியோகத்தர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலப்பகுதிக்கு மட்டும் அந்த விடுமுறையைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் விடுமுறைக்கான அனுமதியைப் பெற்று, அந்த விடுமுறையைக் கழிக்கும் எதிர்பார்ப்பில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு, அனுமதிக்கப்பட்ட காலப்பகுதிக்கு அமைவாக விடுமுறையைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதாக பொது நிர்வாக அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள, அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ள புதிய விடுமுறை விண்ணப்பங்கள் மற்றும் விடுமுறை நீடிப்பு விண்ணப்பங்களுக்கு புதிய சுற்றறிக்கையினால் பாதிப்பு ஏற்படாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேவைகளைப் பூர்த்தி செய்யாத மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் குறைபாடுகள் உள்ள விடுமுறை விண்ணப்பங்கள் மீள் பரிசீலனை இன்றி நிராகரிக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உள்நாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடுமுறை விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்