Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன் ?

கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன் ?

7 வைகாசி 2020 வியாழன் 15:35 | பார்வைகள் : 13781


 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரையில் இதுவரை 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 பேர் கர்ப்பிணிகள்.

 
தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. எனவே கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகள் எவ்வாறு தங்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
 
500 பேருக்கு பரிசோதனை
 
மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகள் அனைவருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது பிரசவ தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரு வாரத்திற்கு முன்பு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவர்களுக்கு பாதிப்பு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாத இறுதியில் இருந்து அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இந்த கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 59 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ரத்த பரிசோதனை, எச்.ஐ.வி. பரிசோதனை போன்று கொரோனா தொடர்பான பரிசோதனையும் செய்யப்படுகிறது. அதன்படி இதுவரை புறநகர் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
 
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
 
கர்ப்பிணிகள் வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுபோல் கர்ப்பிணிகள் இருக்கும் வீட்டில் மற்ற நபர்களும் வெளியே சென்று வரும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் நோய் தொற்று அவர்களை விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
 
ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு வரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதாவது காலை முதல் மதியம் 12 மணி வரை மற்ற நோயாளிகள் அதிக அளவில் வருவார்கள். எனவே மற்ற நோயாளிகளிடமிருந்து கர்ப்பிணிகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க மதியத்திற்கு மேல் கர்ப்பிணிகளை சிகிச்சைக்கு வரவைக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் குறித்தும் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறையின் மூலம் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் கர்ப்பிணிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கடைபிடிக்கும்பட்சத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
 
தனிமைப்படுத்தவும்
 
கர்ப்பிணிகள் இருக்கும் வீடுகளில் உள்ள மற்ற நபர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே சென்று வந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். அதுபோல் வீட்டிலுள்ள குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். குழந்தைகள் வெளியே சென்று விளையாடி விட்டு வரும்போதும் அதன்மூலம் நோய்த்தொற்று கர்ப்பிணிகளுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும் போது தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியமான உணவுகள், பழங்களை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்