Paristamil Navigation Paristamil advert login

ஆயுதங்களை கீழே போடுங்கள்: நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை

ஆயுதங்களை கீழே போடுங்கள்: நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை

19 சித்திரை 2025 சனி 06:19 | பார்வைகள் : 3123


நக்சலைட்டுகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் நவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் நக்சலைட்டுகள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், சுக்மாவின் படேசெட்டி பஞ்சாயத்தில் 11 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர், இதன் காரணமாக இந்த பஞ்சாயத்து முற்றிலும் நக்சல் இல்லாததாக மாறியுள்ளது.

மேலும், 22 நக்சலைட்டுகள் சுக்மாவில் சரணடைந்தனர், மொத்த சரணடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது. நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க, போராடும் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் சத்தீஸ்கர் போலீசாரை நான் வாழ்த்துகிறேன்.

மறைந்திருக்கும் நக்சலைட்டுகள் மத்திய அரசின் சரணடைதல் கொள்கையை ஏற்று, கூடிய விரைவில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன்னர் நக்சலிசத்தின் பிடியில் இருந்து நாட்டை விடுவிப்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.