Paristamil Navigation Paristamil advert login

தனிமையும்... நானும்...!

தனிமையும்... நானும்...!

10 மாசி 2019 ஞாயிறு 12:32 | பார்வைகள் : 15026


கனவுகளை புதைத்துவிட்ட
கல்லறை தோட்டம் வழியே
நடைபிணத்தின் சிறு உருவாய்
நடமாடுகிறேன் நான்...!
 
நிறைவேறாத ஆசைகளின்
நீண்டதொரு பட்டியல்
கவலை சேகரிக்கும் இதயத்தில்
கசங்கி கிடக்கிறது...!
 
நடக்கும் பாதைகளில்
நாளை பூக்கள் கிடக்குமென
இன்று கிழிக்கும் முட்களின் மேல்
இரத்தம் சொட்ட நடக்கின்றேன்...!
 
தாலாட்டும் சோகமும்
தலைகோதும் தனிமையும்
இமைகளின் வாசல்வழியே
இரவெல்லாம் வழிகிறது...!
 
எதிர்பார்த்து கிடைக்காத அன்பும்
ஏமாறி உடைந்த நெஞ்சும்
வலிதரும் பெரும் சுமையாய்
வாழ்வோடு நீள்கிறது...!
 
முடித்து விடலாமென நினைக்கும்
முடிவுறா என் வாழ்க்கையை
மீண்டும் வாழச்சொல்லி - என்னை
மீட்டுச் செல்கிறது....!
என் ஏதோ ஒரு நம்பிக்கை...
இல்லை
யாரோ ஒருவரின் வேண்டுதல்...