Paristamil Navigation Paristamil advert login

காதலித்துவிடாதே...!!

காதலித்துவிடாதே...!!

26 பங்குனி 2019 செவ்வாய் 07:20 | பார்வைகள் : 16089


ஆயிரம் சிலுவைகளில்
ஆணிகளால் அறையப்படும்
வலி அறிந்ததுண்டா...?
 
நரம்புகளில் கூட
கண்ணீர் துளிகள் வழிந்து
கண்டதுண்டா...?
 
மாலைக்கும்,
காலைக்குமிடையேயான தூரத்தில்
கோடி முறை மரித்ததுண்டா...?
 
பேச்சும் மூச்சும்
தொண்டையில் சிக்கியே
தொல்லை தந்ததுண்டா...?
 
உச்சி வெயிலில்
இருள் தெரிந்ததுண்டா...?
இசையில்
இரைச்சல் கேட்டதுண்டா...?
 
பெரும் சாலையிலோ,
சிறு தெருவிலோ நின்று
கதறி அழ நினைத்ததுண்டா...?
 
பிடித்த உணவில் கூட
கொடிய நஞ்சின்
சுவை உணர்ந்ததுண்டா...?
 
வானம் உடைந்து
பூமியே பிளந்து
உலகமே அழிந்து போக
வேண்டியதுண்டா..?
 
மரணத்திற்காய் கடவுளிடம்
மன்றாடியதுண்டா...?
 
கோடி மரணங்களைவிட
கொடியது இந்த காதல்...!
ஆதலால்
காதலித்துவிடாதே...