Paristamil Navigation Paristamil advert login

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்!!

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்!!

30 ஆனி 2026 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 429


2026 ஆம் ஆண்டின் முதல் பாதி முடிவடையும் நிலையில், கோடைகாலத்தின் தொடக்கத்துடன் பல புதிய சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் ஜூலை 1 முதல் அமுலுக்கு வருகின்றன.

புதிய குழந்தை பிறப்பு விடுப்பு அறிமுகம்

ஜூலை 1 முதல் புதிய பெற்றோர்கள் “பிறப்பு விடுப்பு” எனப்படும் கூடுதல் விடுப்பைப் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை வழங்கப்படுவதுடன், குழந்தையுடன் கூடுதல் நேரம் செலவிடுவதற்காக பெற்றோருக்கு பகுதி அளவில் நிதி உதவியும் வழங்கப்படும்.

இந்த விடுப்பை தாய் மற்றும் தந்தை இருவரும் ஒரே நேரத்தில் அல்லது மாறிமாறியும் பயன்படுத்த முடியும். 2026 ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமே இதற்கு தகுதி பெறுகின்றனர்.

எரிவாயு விலையில் 7.4 சதவீத உயர்வு

எரிவாயு பயன்படுத்தும் மக்களுக்கு ஜூலை மாதம் முதல் கூடுதல் செலவுகள் ஏற்படவுள்ளன. இயற்கை எரிவாயுவின் குறிக்கோள் விற்பனை விலை 7.4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சராசரி குடும்பத்தின் ஜூலை மாத எரிவாயு கட்டணத்தில் சுமார் 2.70 யூரோ வரை அதிகரிப்பு ஏற்படும் என எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

சிறிய வெளிநாட்டு பொதிகளுக்கு புதிய சுங்கவரி

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு இனிமேல் கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது. 150 யூரோவிற்குக் குறைவான சிறிய பொதிகளுக்கு ஒவ்வொரு பொருளுக்கும் 3 யூரோ வரி விதிக்கப்படும்.

இதற்கு மேலாக, ஏற்கனவே பிப்ரவரி மாதம் முதல் அமல்படுத்திய 2 யூரோ வரியும் தொடரும். இதனால் ஒவ்வொரு பொருள் வகைக்கும் மொத்தமாக 5 யூரோ வரை வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது.

70 வயதுக்கு மேற்பட்டோருக்கான சலுகை குறைப்பு

வீட்டு உதவியாளர்களை பணியில் அமர்த்தும் முதியோருக்கான சமூகக் கட்டண விலக்கு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 70 வயதுக்கு மேற்பட்டோர் தானாகவே இந்த சலுகையைப் பெற்றுவந்த நிலையில், இனிமேல் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே முழு விலக்கு வழங்கப்படும்.

இதனால் 70 முதல் 79 வயதுக்குள் உள்ளவர்கள் வீட்டுப் பணியாளர்களை நியமிக்கும் போது கூடுதல் செலவுகளைச் சந்திக்க நேரிடும்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு வீட்டு உதவித் தொகை நிறுத்தம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து வரும் மற்றும் கல்வி உதவித்தொகை பெறாத மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு வசதி உதவித்தொகை (APL) ஜூலை 1 முதல் நிறுத்தப்படவுள்ளது.

இருப்பினும், பயிற்சி வேலை (apprentissage) மேற்கொள்ளும் மாணவர்கள் அல்லது படிப்புடன் இணைந்து வாரத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது வேலை செய்யும் மாணவர்கள் இந்த உதவியைத் தொடர்ந்து பெற முடியும்.