Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் பயங்கரவாதமே இந்தியாவின் பெருங்கவலை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

பாகிஸ்தான் பயங்கரவாதமே இந்தியாவின் பெருங்கவலை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

26 வைகாசி 2026 செவ்வாய் 11:37 | பார்வைகள் : 649


பாகிஸ்தான் மண்ணில் இருந்து கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாதம் தான் இந்தியாவின் பெருங்கவலையாக இருக்கிறது. அந்த கவலை நியாயமானது தான்,'' என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

டில்லியில், 'குவாட்' நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நாளை ( மே 26)நடக்கிறது. இதில் பங்கேற்க நான்கு நாள் அரசுமுறை பயணமாக வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.

இந்நிலையில், டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா - பாகிஸ்தான் உறவு, சமூக வலைதளங்களில் இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்படும் இனவெறி பேச்சுகள் குறித்து பல்வேறு முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட மோதலை தீர்க்கும் வகையில், பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டது. இது குறித்து இந்தியாவுடன், நாங்கள் எந்த விவாதமும் நடத்தவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவும் ஆட்சேபனை தெரிவிக்கும் என நாங்கள் நினைக்கவில்லை.

எனினும், பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் கவலை வேறு விதமானது. அந்த மண்ணில் இருந்து கட்டவிழ்க்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தே இந்தியா தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. இந்தியாவின் கவலை எப்போதும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை மையப்படுத்தியே இருக்கிறது. அந்த அச்சம் நியாயமானது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.