Paristamil Navigation Paristamil advert login

எத்தனாலில் இயங்கும் கார் அறிமுகம் செய்கிறது மாருதி நிறுவனம்: நிதின் கட்காரி

எத்தனாலில் இயங்கும் கார் அறிமுகம் செய்கிறது மாருதி நிறுவனம்: நிதின் கட்காரி

25 வைகாசி 2026 திங்கள் 09:39 | பார்வைகள் : 675


இந்தாண்டு சுற்றுச்சூழல் தினத்தில் ( ஜூன் 5) 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும்  Flex - Fuel காரை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் நிதின் கட்காரி பேசியதாவது: நமது நாட்டில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையாக பெட்ரோல் மறறும் டீசல் ஆகியவை உருவெடுத்துள்ளன. இதனால், போக்குவரத்து துறை அமைச்சர் என்ற முறையில்,  மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள் ,பஸ்கள், லாரிகள் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  தற்போது மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரும் வந்துவிட்டது. இத்துடன், நமது விவசாயிகள், எரிசக்தி வழங்குபவராகவும், நாட்டிற்கு எரிபொருள் விநியோகம் செய்பவராகவும் மாறி உள்ளனர்.

இன்று நான் வந்த வாகனம் 100 சதவீதம் பயோ எத்தனாலில் இயங்கக்கூடியது. எத்தானலின் விலை லிட்டருக்கு 65 ரூபாய் என விற்பனை ஆகிறது.  அந்த வாகனம் இயங்கும்போது 60 சதவீத  மின்சாரமும் உற்பத்தி ஆகிறது. இந்த வாகனத்தை கடந்த 1.5 ஆண்டாக பயன்படுத்தி வருகிறேன். பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடும்போது, எரிபொருள் செலவு லிட்டருக்கு 25 ரூபாய் ஆகிறது. இந்த வகை எரிபொருள், இறக்குமதிக்கு மாற்றானது. செலவு குறைவதுடன், மாசுபாடற்ற மற்றும் உள்நாட்டு தயாரிப்பு ஆகும்.

இதுபோன்ற  Flex Fuel இன்ஜின்கள் கொண்ட வாகனங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,  டில்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் மாருதி சுசுகி நிறுவனம் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது.தற்போது டொயோட்டா, டாடா, மஹிந்திரா மற்றும் சுசுகி  உள்ளிட்ட 12 நிறுவனங்கள் ஏற்கனவே இதுபோன்ற வாகனங்களை அறிமுகம் செய்துள்ளன.

நமது இரு சக்கர வாகனங்களும் மாறிவிட்டன. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டை நாம் குறைக்க வேண்டும். இந்த எரிபொருட்களில் 87 சதவீதம் நமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இறக்குமதியையும் அதிகரிக்கின்றன. இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.