Paristamil Navigation Paristamil advert login

சிறுநீரக முறைகேடு விசாரணை: தீவிரப்படுத்த அரசு உத்தரவு

சிறுநீரக முறைகேடு விசாரணை: தீவிரப்படுத்த அரசு உத்தரவு

21 வைகாசி 2026 வியாழன் 09:50 | பார்வைகள் : 609


மூளைச் சாவு அடைவோரிடம் இருந்து பெறப்படும் உறுப்புகளானது,தானம் கோரி, ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு, உரிய வரிசைப்படி வழங்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதில், மாநில உறுப்பு மாற்று ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. அதேநேரம், உயிருடன் இருப்பவர்கள், தங்களின் ரத்த உறவுகளுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரகத்தை தானமாக அளிக்கும் நடைமுறைகளில், சில சிக்கல்கள் உள்ளன.

இதை பயன்படுத்தி, இடைத்தரகர்களும், தனியார் மருத்துவ துறை சார்ந்த சில நபர்களும், வறுமையில் உள்ளவர்களை, உறுப்பு தானம் அளிக்குமாறு, மூளைச் சலவை செய்கின்றனர்.

அவர்களை நோயாளியின் ரத்த உறவு என அடையாளப்படுத்த, போலி ஆவணங்களையும் தயார் செய்கின்றனர். இது போன்ற சம்பவம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடந்தது.

மஹாராஷ்டிரா விவசாயிகளிடம், தமிழகத்தை சேர்ந்த டாக்டர்களும், இடைத்தரகர்களும் சிறுநீரக முறைகேடில் ஈடுபட்டதாக, மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது.

இதை விசாரிக்க, மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை கூடுதல் இயக்குநர் தலைமையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு விசாரணை தொய்வில் இருந்த நிலையில், மீண்டும் தீவிரப்படுத்த, மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவம் ஊரக நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தொடர்ந்து விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். மேலும் சில உறுப்பு மாற்று முறைகேடு புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவை உறுதி செய்யப்பட்டால், தகவல்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும். விசாரணையை தீவிரப்படுத்த, அரசு அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.