Paristamil Navigation Paristamil advert login

கிரிப்டோகரன்சி தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பிரெஞ்சு அரசாங்கம் கடும் நடவடிக்கை!!

கிரிப்டோகரன்சி தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பிரெஞ்சு அரசாங்கம் கடும் நடவடிக்கை!!

17 வைகாசி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 917


கிரிப்டோகரன்சி தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் மட்டும் 67 தாக்குதல் சம்பவங்களும், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 45 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்செயல்களில், குற்றவாளிகள் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களை வீட்டில் சிறைபிடித்து, அச்சுறுத்தலின் மூலம் டிஜிட்டல் சொத்துகளை மாற்றிக்கொள்ள முயலுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சம்பவங்களில் மிகவும் கொடூரமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் உறுப்புகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களும் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். மேலும், கிரிப்டோ முதலீட்டாளர்களின் குடும்பத்தினரை கடத்தி மிரட்டும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரபலமான கிரிப்டோ தொழிலதிபர்களே குறிவைக்கப்பட்ட நிலையில், தற்போது சாதாரண கிரிப்டோ வைத்திருப்போரும் குற்றவாளிகளின் இலக்காக மாறியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

இந்த புதிய குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பிரெஞ்சு அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாகவும், வெளிநாடுகளில் இருக்கும் குற்றவியல் வலையமைப்புத் தலைவர்களையும், பிரான்ஸில் செயல்படும் அவர்களது கூட்டாளிகளையும் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் பிரிவுகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருவதுடன், இணையத்தில் அடையாளம் காணப்படும் சந்தேகநபர்கள் சில நேரங்களில் 24 மணிநேரத்திற்குள் கைது செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும், கிரிப்டோ வைத்திருப்போர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு விழிப்புணர்வு பணிகளையும் முன்னெடுத்து வருகிறது.