Paristamil Navigation Paristamil advert login

காலத்தால் அழியாத சனாதன தர்மம்: உதயநிதி விருப்பத்தை நிறைவேற்றட்டும்; ஸ்ரீதர் வேம்பு

காலத்தால் அழியாத சனாதன தர்மம்: உதயநிதி விருப்பத்தை நிறைவேற்றட்டும்; ஸ்ரீதர் வேம்பு

15 வைகாசி 2026 வெள்ளி 06:31 | பார்வைகள் : 247


தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உறுதி செய்து வருவதாக, 'ஜோஹோ' நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கை: தி.மு.க., இளைஞரணி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி, 'சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்' என, திரும்ப திரும்ப தாக்குதல் நடத்தி வருகிறார். ஆனாலும்,​மிகுந்த மதப்பற்றுள்ள தமிழ் ஹிந்துக்கள் அதிகமாக கோபமடையவில்லை. இதற்கு மொழி தான் காரணம் என்று, நான் நினைக்கிறேன்.

தமிழில், 'சனாதனம்' என்ற சொல், வழக்கமான பயன்பாட்டில் இல்லை. பெரும்பாலான தமிழர்களுக்கு இந்தச் சொல் தெரியாது. சிறு வயதில் எனக்கே இது தெரிந்திருக்கவில்லை. ஆனால், 'தர்மம்' என்ற சொல் தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தர்மபுரி என்ற பெயரில், ஒரு மாவட்டமும் உள்ளது. 'தர்மம்' என்ற அதே பொருளில், 'அறம்' என்ற சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது.

ஹிந்தியில் தர்மம் என்றால், மதம் என்று பொருள்படும். பொதுவாக ஹிந்து மதம், ஹிந்து தர்மம், சனாதன தர்மம் என்று அழைக்கப்படுகிறது. 'தர்மம்' என்ற சொல்லை பயன்படுத்தி, உதயநிதி ஹிந்து மதத்தை தாக்கியிருந்தால் பரவலாக விமர்சிக்கப்பட்டு இருப்பார். அதனால் தான், ஹிந்து மதத்தை தாக்க, தமிழில் பரவலாக பழக்கத்தில் இல்லாத 'சனாதனம்' என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார்.

இப்போது, 'சனாதனம்' என்ற சொல்லை, தமிழிலும் பிரபலப்படுத்தி, தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை இன்னும் அதிகப்படுத்தி உள்ளார். தி.மு.க., ஒரு போதும் தனித்து பெரும்பான்மை பெற்றதில்லை. அந்த அளவுக்கு அக்கட்சிக்கு எதிர்ப்பலை உள்ளது.

ஹிந்து தெய்வங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களால், தி.மு.க.,வுக்கு எதிரான அலையை அவர்களே உருவாக்கினர். அ.தி.மு.க., ஒருபோதும் அதைச் செய்யவில்லை. தி.மு.க., எதிர்ப்பலையை, அ.தி.மு.க., அறுவடை செய்தது.

இப்போது, தமிழக வெற்றிக் கழகம், ஒரு புதிய தி.மு.க., எதிர்ப்பு கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க., அரசுக்கு எதிரான ஓட்டுகளை, அ.தி.மு.க., பிரித்திருந்த போதிலும், வலுவான கூட்டணியுடன் அபரிமிதமாக தி.மு.க., பணத்தை செலவழித்திருந்த போதிலும், தி.மு.க., தோற்றது. கூட்டணியே அமைக்காத த.வெ.க., வென்றது.

தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருப்பதை, உதயநிதி உறுதி செய்ய விரும்புகிறார். காலத்தால் அழியாத சனாதன தர்மம், அவரது விருப்பத்தை நிறைவேற்றட்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.