அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் : ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்பு!!
15 ஆனி 2026 திங்கள் 08:05 | பார்வைகள் : 346
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள சமாதான உடன்பாட்டை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வரவேற்றுள்ளார். பல்வேறு நாடுகளின் இராஜதந்திர முயற்சிகளின் பலனாக இந்த ஒப்பந்தம் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் இந்த உடன்பாட்டை விரைவாகவும் முழுமையாகவும் அமுல்படுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை உடனடியாகவும் எந்த நிபந்தனையும் இன்றியும் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். இதற்காக பிரிட்டனுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பணிக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடல் போக்குவரத்து எந்த கட்டுப்பாடுகளும் கட்டணங்களும் இன்றி மீண்டும் ஆரம்பிக்கப்படுவது, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கும் உலக பொருளாதாரத்திற்கும் அத்தியாவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உடன்பாடு மத்திய கிழக்கில் நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை உருவாக்கும் விரிவான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் எனவும் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்கள் தொடர்பான அச்சங்கள், பிராந்தியத்தில் நிலைதடுமாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவை பேச்சுவார்த்தையில் முக்கியமாக எடுத்துரைக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, லெபனானின் இறையாண்மையை மீட்டெடுக்க அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரான்ஸ் தொடர்ந்து முழு ஆதரவை வழங்கும் என்றும், லெபனானில் வலுவான மற்றும் நீடித்த போர்நிறுத்தம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan