Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி - பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி - பொது மக்களுக்கு எச்சரிக்கை

11 ஆனி 2026 வியாழன் 12:51 | பார்வைகள் : 296


இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பதிவு செய்வதாக கூறி ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்று நிதி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ துரித அழைப்பிலக்கத்தை போன்ற தொலைபேசி இலக்கங்களிலிருந்து பொதுமக்களைத் தொடர்பு கொண்டு மின்னணு தேசிய அடையாள அட்டை அல்லது டிஜிட்டல் அடையாள அட்டைக்கான பதிவுகளை மேற்கொள்வதாக கூறி சிலர் ஏமாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடிகளுக்காக தங்களை திணைக்கள அதிகாரிகள் எனப் போலியாக் காட்டிக்கொள்ளும் நபர்கள் +94 11 5226126, 011 5226126, 0771167739 மற்றும் 0742756098 ஆகிய தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி வருதாக கண்டயறியப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மோசடியின் பின்னணியல் உள்ளவர்கள் அரசாங்க இலட்சினையை பயன்படுத்தி ஒரு போலி கையடக்க தெலைபேசி செயலியை உருவாக்கியுளள்துடன் அதன் மூலம் டிஜிட்டல் அடையாள அட்டைப் பதிவுக்குத் தேவை என்று கூறி பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை கோரி வருகின்றனர்.

மேலும், ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை போன்று வடிவமைக்கப்பட்ட போலி இணைத்தளத்தின் ஊடாகவும் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்று திணைக்களம் எச்சரித்துள்ளது.

தற்போது டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது மின்னணு தேசிய அடையாள அட்டைகளுக்கான எந்தவொரு பதிவு நடவடிக்கைகளும் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கோ அல்லது போலியான இணையத்தளங்களுக்கோ தங்களின் தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களை வழங்க வேண்டாம் என்று ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.